சென்னையில் இருந்து மைசூரு வரை 435 கி.மீ. தூரத்திற்கு புல்லட் ரயில் அமைக்கும் திட்டம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

சென்னையில் இருந்து கோலார் வரை இந்த திட்டத்திற்கான நில அளவீட்டு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வான்வழி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூரு, சன்னப்பட்டணா, மாண்டியா மற்றும் மைசூர் ஆகிய 9 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும்.

மொத்த தூரத்தில் 84 சதவீதம் உயர்மட்ட பாதையும் 11 சதவீதம் சுரங்கபாதையிலும் செல்லும் என்றும் மீதி தூரம் தரையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த அதிவேக ரயில் நெட்வொர்க்கை உருவாக்குவதற்கான அடித்தளத்தை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (National High-Speed Rail Corporation Limited – NHSRCL) பல ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தது.

புல்லட் ரயில் எனும் இந்த அதிவேக ரயில் நெட்வொர்க் அமைக்க பல்வேறு வழித்தடங்களை ஆய்வு செய்த NHSRCL மைசூரு-சென்னை சிறந்த வழித்தடமாக தேர்ந்தெடுத்துள்ளது.

புல்லட் ரயில் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 1 மணி நேரம் 15 நிமிடத்தில் செல்ல முடியும் என்று கூறப்படும் நிலையில் இதன் கட்டணம் வழக்கமான ரயில் கட்டணத்தை விட 15 மடங்கு அதிமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.