டில்லி
பிரதமர் மோடியின் தலைமையால் பாஜக தேர்தலில் போட்டி இன்றியே ஆட்சி அமைக்கும் என பாஜக செயலர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் பொதுச் செயலரான ராம் மாதவ் ஆர் எஸ் எஸ் அமைப்பில் இருந்து வந்தவர். கடந்த 2019 ஆம் வருட மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் திட்டங்கள் குறித்து சந்தோஷ் குமார் என்னும் பத்திரிகையாளர் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். பாரத் கைசே ஹுவா மோடிமயே என இந்தியில் பெயரிடப்பட்ட இந்த புத்தகத்தின் விழா டில்லியில் நடைபெற்றது. அதில் ராம் மாதவ் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
ராம் மாதவ் தனது உரையில், “கடந்த 2019 ஆம் வருடம் மக்களவை தேர்தல் முழுவதுமே மோடியைச் சுற்றியே இருந்துள்ளது. நாட்டின் மிகவும் பிரபலமான தலைவராக அவர் விளங்குகிறார். இது போல ஒரு வலுவான தலைமை பொதுவாக எதிர்மறையாக இருக்கும் போது இந்த தலைமை நேர்மறையாக உள்ளது.
உலகின் பல நாடுகளில் தலைமை பலவீனத்தால் ஒரு சில மாதங்களிலேயே ஆட்சி கவிழ்ந்துள்ளது. ஆனால் ஒரு வலுவான தலைமை அமையும் போது அதற்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் உண்டாகும். தற்போது மோடிக்கு அந்த நற்பெயர் உள்ளது. இதனால் பாஜக தேர்தல் இல்லாமலே ஆட்சி அமைக்கும் அளவுக்கு வலுவாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.