சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக  நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவியது. இந்த  காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், . தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வும் பகுதி வலுப்பெற்றது. மேற்கு-வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று  வங்கக்கடலில் பயணிக்கும் இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.