சென்னை

டில்லியில் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வரும் 16, 17 தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறுவது உறுதி ஆகி உள்ளது.

கடந்த 2021 மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்துத் தெரிவித்திருந்தார். அவர் இந்த நிதியாண்டில் மட்டும் இரண்டு பொதுத் துறை வங்கிகள் மட்டும் தனியார் மயமாக்கப்படும் என்று கூறியிருந்தார். இது பொதுத்துறை வங்கிகள் மற்றும் அதன் ஊழியர்களிடையே கலக்கத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக டில்லியில் கூடுதல் தலைமை தொழிலாளர் ஆணையருடன் வங்கி சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.  இதனால் திட்டமிட்டபடி வரும் 16, 17-ம் தேதிகளில் 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் எண்ணத்தை அரசு கைவிடவில்லை எனில், இந்த வேலைநிறுத்த போராட்டம் மட்டுமின்றி பல்வேறு வகைகளில் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படும் என்று வங்கிகள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

ஆர்வலர்கள், “இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் வங்கி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் வாடிக்கையாளர்கள், பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது உள்ளிட்ட பல்வேறு வங்கி சேவைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.” எனக் கவலை தெரிவித்துள்ளனர்.