கோவை சூலூரில் உள்ள ராணுவ விமான தளத்தில் இருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டனுக்குச் சென்ற தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற எம்ஐ 17-வி5 ரக ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

 

பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் 10 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிபின் ராவத் மனைவி மதுலிக்கா ராவத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபின் ராவத் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மீட்கப்பட்டவர்களில் பலருக்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் மீட்ப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார்.

பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சர்களிடம் இதுகுறித்து விளக்கமளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு செல்லும் ராஜ்நாத் சிங் விபத்து குறித்த முழுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இன்று மாலை சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய இருக்கிறார்.