திருப்பதி

திருப்பதியில் கோவில்  வளாகத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

திருப்பதியில் மலைக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு பதிலாக ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்தனர்.  தவிர பிரசாத லட்டுக்கள் கொடுக்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாகச் சணல் பைகள் மூலம் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஸ்டீல் பாட்டில்கள் ரூ.300, 400-க்கு விற்பனை ஆகின்றன.  எனவே சாதாரண பக்தர்கள் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியாமல் அவதிபட்டனர். இதைப் பற்றி திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன.

இதையொட்டி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி மூங்கிலால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.  இதன்படி ஒரிசா மாநிலத்தில் இருந்து மூங்கில்கள் வரவழைக்கப்பட்டு எந்திரங்கள் மூலம் மூங்கிலை வெட்டி எடுத்து அழகிய வடிவில் குடிநீர் பாட்டில்களாகத் தயார் செய்துள்ளனர். இவை ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு மூங்கிலால் செய்யப்பட்ட பாட்டில்களில் உள்ள குடிநீர் புதிய சுவையுடன் உள்ளது.  எனவே இந்த குடிநீர் பாட்டில்களுக்குப் பக்தர்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.