வைஷாலி பிக்சர்ஸ் வெங்கட் தயாரிப்பில் சிவகார்த்திக் இயக்கத்தில் சாண்டி-மானசா நடிக்கும் “பலசாலி”

’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித அறிவும் தான். இதை சுந்தர்.சி பட பாணியில் முழுக்க முழுக்க காமெடியாக சொல்லும் படம் தான் ’பலசாலி’.

பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னை விட பலசாலிகளை தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்லும் கதைதான் ”பலசாலி”. ”சூது கவ்வும்” பாணியிலான ”பிளாக் ஹியூமர்” படமாக உருவாகிறது ”பலசாலி”.

unnamed-5பொதுவாக இதுமாதிரியான படங்களில் கோழையான ஹீரோவை பின்பகுதியில் வீரனாக்குவது போல் கதை இருக்கும். ஆனால் ”பலசாலி” படத்தின் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரையுமே ஹீரோ ஒரு சாதாரண ஆளாகத் தான் இருப்பார். ஆனால் அவன் எதிர்த்து வெல்வது எல்லாமே அவனைவிட பலசாலியான ஆட்கள் தான். சண்டைக்காட்சிகள் கூட வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் சண்டைகளாகத் தான் இருக்கும்.

கதைக்கு தேவைப்பட்டது ”தமிழ் சினிமாவின் பாக்கியம்” ”நகைச்சுவையின் எல்லை” நாகேஷ் மாதிரியான ஒருவர். இயக்குனர் ஆறு மாதங்களுக்கு மேல் தேடி சோர்ந்துவிட்டார். கடைசியாக வந்து கிடைத்தவர் ”நடன மன்னன்” சாண்டி. நடமாடினாலும் அதில் ஒரு நகைச்சுவை கலர் இருக்கும் சாண்டியின் அணுகுமுறையில். அந்த அணுகுமுறையே இந்த படத்தில் பலசாலியாக அதாவது ஹீரோவாக சாண்டி நடிக்கக் காரணம் . அவருக்கு ஜோடியாக சண்டிக்குதிரை படத்தில் கதாநாயகியாக நடித்த மானஸா நடிக்கிறார்.

நடிகர் ஆனந்த ராஜ் ஹீரோவுக்கு இணையான ஒரு கேரக்டரில் நடிக்கிறார்.

சாம்ஸ்,லொள்ளுசபா சுவாமிநாதன், மனோபாலா, லொள்ளுசபா மனோகர், தினா, நிரோஷா, ஆதித்யா டிவி லோகேஷ், நிஷாந்த் என தமிழ் சினிமாவில் வளர்ந்த,வளரும் காமெடியன்கள் பலசாலிக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு இஎன் ஜே ஹரீஷ். ”பர்மா” படத்திற்கு இசையமைத்த சுதர்சன் இசை. படத்தொகுப்பு வில்சி.
பலசாலி படத்தை இயக்குபவர் இயக்குனர் சிவகார்த்திக். இவர் ஏற்கெனவே ”ரீங்காரம்”,”கடலை போட பொண்ணு வேணும்” ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர். இரண்டு படங்களுமே ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. வைஷாலி பிக்சர்ஸ் சார்பாக கோவையைச் சேர்ந்த வெங்கட் தயாரிக்கிறார்.

முழுக்க முழுக்க சென்னையில் உருவாகும் பலசாலி படம் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வகையில் நல்ல பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது.