சென்னை: ஆயுத பூஜை – விஜயதசமியை முன்னிட்டு முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழக மக்கள் வெற்றிமேல் வெற்றி பெற்று அனைத்து நலன்களும், வளங்களும் பெறுங்கள் என வாழ்த்தி உள்ளனர்.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான  எடப்பாடி பழனிசாமி:

விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து தொழில்களும், செயல்களும் தெய்வ சக்தியின் அருளால் வெற்றியடையும் என்பது நமது நம்பிக்கை. `செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதையும்; `உழைப்பின் மூலமே வெற்றி’ என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் மக்கள் அனைவரது வாழ்விலும் அனைத்து செல்வங்களும் தழைத்தோங்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, அன்பார்ந்த தமிழக மக்கள் அனைவருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்: அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், பத்தாவது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்னை அம்பிகையின்‌ அருள்‌ வேண்டி கொண்டாடப்படும்‌ நவராத்திரி விழாவின்‌ ஒன்பதாவது நாளில்‌ ஆயுத பூஜையையும்‌, பத்தாவது நாளில்‌ விஜயதசமியையும்‌ மகிழ்ச்சியோடு கொண்டாடும்‌ என்‌ அன்பிற்குரிய தமிழக மக்கள்‌ அனைவருக்கும்‌ எனது இதயம்‌ கனிந்த ஆயுத பூஜை மற்றும்‌ விஜயதசமி. நல்வாழ்த்துகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில்‌ வழிபட்டால்‌ வீரம்‌ பிறக்கும்‌, லட்சுமி வடிவில்‌ வழிபட்டால்‌ செல்வம்‌ பெருகும்‌. சரஸ்வதி வடிவில்‌ வழிபட்டால்‌ கல்வி சிறந்தோங்கும்‌ என்கிற நம்பிக்கையின்‌ அடிப்படையில்‌ முதல்‌ மூன்று நாட்கள்‌ தீமையை அழிக்கும்‌ சக்தி வடிவமான துர்கா தேவியையும்‌, அடுத்த மூன்று நாட்கள்‌, செல்வத்தின்‌ அதிபதியான லட்சுமி தேவியையும்‌, இறுதி மூன்று நாட்கள்‌, அறிவின்‌ வடிவமான சரஸ்வதி தேவியையும்‌ மக்கள்‌ பக்தியுடன்‌ வழிபடுவார்கள்‌. ஒவ்வொருவரின்‌ வாழ்வுக்கும்‌ ஆதாரமாகத்‌ திகழ்கின்ற அவரவரது தொழிலின்‌ மேன்மையைப்‌ போற்றும்‌ வகையில்‌ மக்கள்‌ தத்தமது தொழிற்‌ கருவிகளுக்கெல்லாம்‌ பூஜை செய்து வழிபடும்‌ திருநாளே ஆயுத பூஜையாகும்‌. நவராத்திரி பண்டிகையின்‌ பத்தாவது நாளான விஜயதசமி திருநாளன்று தொடங்கிடும்‌ நற்காரியங்கள்‌ அனைத்தும்‌ வெற்றி பெறும்‌ என்ற நம்பிக்கையில்‌, மக்கள்‌ அன்னை மகா சக்தியை வணங்கி கல்வி, கலை, தொழில்‌ போன்றவற்றை தொடங்கி வெற்றித்‌ திருநாளான விஜயதசமி திருநாளை கொண்டாடுவார்கள்‌. இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை மற்றும்‌ விஜயதசமி திருநாளில்‌, அன்னையின்‌ அருளால்‌ மக்கள்‌ அனைவரும்‌ வாழ்வில்‌ வெற்றி மேல்‌ வெற்றி பெற்று, எல்லா நலங்களையும்‌, வளங்களையும்‌ பெற்று மகிழ்வுடன்‌ வாழ்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும்‌ ஒரு முறை உரித்தாக்கிக்‌ கொள்கிறேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அறிவை தரும் கல்வி நம் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அந்த கல்வியையும், பண்பாடு, கலாச்சாரம், ஞானம், இசை, அறிவு போன்றவற்றை வழங்கும் சரஸ்வதி தேவியை இன்று போற்றி வணங்குகிறோம்.

அறிவை தரும் கல்வியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும், வளத்தையும் தரும் இயந்திரங்களை போற்றி வணங்கும் இந்த நன்னாளில், அனைவரும் சரஸ்வதிதேவியின் அருளை பெற்று, கல்வியிலும், தொழில்துறையிலும் சிறந்து விளங்க, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்கள் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவர் இல்லங்களிலும் செல்வமும் ஆரோக்கியமும் பெருகவும், குழந்தைகள் நல்ல கல்வி வளத்தினைப் பெறவும், தொழில் முனைவோர்கள் நல்ல லாபம் ஈட்டவும் அன்னை சரஸ்வதி தேவி ஆசீர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: உழைப்பின் உன்னதத்தை உணர்த்தும் ஆயுத பூஜை மற்றும் வெற்றித் திருநாளான விஜயதசமியைப் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விஜயதசமி தினத்தன்று நாம் தொடங்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையோடு புதிய சாதனைகள் படைப்பதற்கான பணிகளை இந்நாளில் தொடங்கிடுவோம். தீய சக்தியை அழித்து துர்கா தேவி பெற்ற வெற்றியைக் குறிக்கும் இந்த தினத்தில் மக்களின் எண்ணங்கள் யாவும் ஈடேறவும், தொழிலில் முன்னேற்றங்கள் காணவும், இறைவன் அருள் புரியட்டும்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: நவராத்திரியின் முதல் மூன்று நாட்களின் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபட்டு, மனிதனுக்கு வீரம், செல்வம், ஞானம் ஆகிய மூன்றின் அவசியத்தை உணர்த்தும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகையினை நவராத்திரியின் 9 – வது நாளில் கொண்டாடி மகிழ்கிறோம்.

நவராத்திரி விழாவின் நிறைவாக பத்தாவது நாளில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும், விஜயதசமி தினம் துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்ததை போற்றும் விதமாக, வெற்றியின் தினமாக அனுசரிக்கப்படுகிறது.