புதுச்சேரி: புதுச்சேரிமாநிலத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மாநில பாஜக எம்எல்ஏ, அவ்வையார் கூட திருக்குறள்ல சொல்வாங்க என கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவ்வையார் யார், திருக்குறளை இயற்றியவர் யார் என்பதுகூட தெரியாத பாஜக எம்எல்ஏவின் பேச்சு கடுமையாக விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.

புதுச்சேரியில் 72வது சட்ட நாள் விழா முதல்வர் ரங்கசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாநில பாஜக எம்எல்ஏ அசோக் பாபு, முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மோடி குறித்து வானளாக புகழ்ந்து பேசியதுடன், அவர்கள் ஞானிகள் என்று தாறுமாறாக புகழ்ந்து தள்ளினார். அப்போது அவ்வையார் கூட, திருக்குறள்ல சொல்வாங்க,  என  பேசத் தொடங்கினார்.

இதை கேட்ட மேடையில் இருந்து முதல்வர் உள்பட அதிகாரிகள் மட்டுமின்றி, சட்டநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வழக்கறிஞர்களும், கட்சியினர் கலகலவென சிரித்தனர்.

இதனால் சுதாரித்துக்கொண்ட, எம்எல்ஏ அசோக் பாபு.இல்ல… அவ்வையார் சொன்னது ஆத்திச்சூடிதான்…ஃபுல்லா கேட்டீங்கனனா கரெக்டாக இருக்கும் என கூறி சமாளித்தார்.

ஒரு மாநிலத்தின் சட்டத்தை உருவாக்கும் சட்டமன்ற உறுப்பினர், அதுவும் சட்ட நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவ்வையார் திருக்குறள்ல சொல்வாங்க என பேசியது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.