saf55
கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் தேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகரை ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமை மு.க.ஸ்டாலின் பேசினார்.
அவர், ‘’கடந்த 5ஆண்டுகளாக தமிழக சட்டப்பேரவையில் நானும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சி.எச்.சேகரும் பல கொடுமைகளை அனுபவித்தோம். தமிழக முதல்வர் தான் சொல்லாததையும் செய்துள்ளோம் என்கிறார். ஆம், அவர் சொல்லாததையும் செய்துள்ளார். அது வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்ததும், செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து மக்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளத்தை திருப்பி விட்டதும் மட்டுமே ஆகும்.
தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஆவின் பால் விலை 7 ரூபாய் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவர். அதுபோல் 2 மாதத்துக்கு ஒரு முறை மின்சார யூனிட் அளவுப்படி அதிக மின் கட்டணம் செலுத்தி வந்த மக்கள் இனி மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்துவதால் அவர்களுக்கு 200 ரூபாய் முதல் 2,000ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் குறைய உள்ளது.
கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுவது, அனைவருக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது போன்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. குடிநீரை இலவசமாக தருவோம் என்று அறிவித்து, கும்மிடிப்பூண்டியில் செயல்படும் அம்மா குடிநீர் தொழிற்சாலை மூலம் 10 ரூபாய்க்கு குடிநீர் விற்கப்படுகிறது. குடிநீரை விற்கும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே என்றார்”.