மாமல்லபுரம்

செயல் அலுவலர் மேற்பார்பர்வையில் மாமல்லபுரம் சுற்றுலா வாகன நுழைவுக் கட்டண உரிம ஏலம் நடந்துள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு நுழைவு மற்றும் வாகன நிறுத்த கட்டணத்தைப் பேரூராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது. ஆண்டு தோறும் இதற்காக பொது ஏலம் நடத்தி தனியாருக்கு உரிமம் அளிக்கிறது.

கடந்த 2023-24-ம் ஆண்டில் உரிமம் ஒப்படைக்கும் நாள் தொடங்கி 2024 மார்ச் மாதம் 31-ந்தேதி வரை கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கு, ரூ.15 லட்சம் வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. பொது மற்றும் இணையவழி ஏலம் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் வி.கணேஷ் மேற்பார்வையில் பொது ஏலம் நடத்தப்பட்டது.

ஏலத்தில் தி.மு.க.வை சேர்ந்த முந்தைய ஏல உரிமைதாரர் தங்கமணி, அ.தி.மு.க.வை சேர்ந்த வின்சென்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். ஏலம் அரசின் ஆரம்ப கேட்பு தொகையாக ரூ.1½ கோடிக்கு ஏலம் தொடங்கப்பட்டது. ஆனால் யாரும் ஏலம் கோராததால் ஏலத்தொகை ரூ.1½ கோடியாகக் குறைக்கப்பட்டது.

அப்போது ஏலதாரர்கள் 3 பேரும் ஏலத்தொகையை மாறி, மாறி உயர்த்தி கேட்டனர். அன்பரசன் ரூ.1½ கோடிக்கு உயர்த்தி ஏலம் கேட்டார். வேறு யாரும்  அதிகம் கேட்காததால் ஏலம் முடிக்கப்பட்டது. இணையவழி ஏலத்தில் அவரவர் குறிப்பிட்டிருந்த ஏல தொகையை பேரூராட்சி நிர்வாகத்தினர் பரிசீலித்தபோது, தங்கமணி ரூ.1 கோடியே 61 லட்சத்து 70 ஆயிரத்துக்குக் கோரியிருந்தார்.

ஆகவே 2 ஏலங்களில் இணைய வழியில் தங்கமணி கோரியிருந்த தொகையே அதிகம் என்பதால் அவருக்கு உரிமம் வழங்க முடிவெடுக்கப்பட்டது.

ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவை சேர்த்து ரூ.1 கோடியே 93 லட்சத்து 29 ஆயிரத்து 744 பெற்றதாகப் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஏலதாரருக்கு ஒப்புதல் அளித்து கட்டணம் வசூல் செய்ய உரிமம் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வரை 8 மாதத்திற்குக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் ஏலதாரருக்கு வழங்கப்பட்டது.