சென்னை

திவு கட்டணம் உயர்ந்துள்ளதால் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 9 சதவீத தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.  இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது.

இதற்கு முன்பு ரூ.50 லட்சத்துக்கு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கும் நிலையில் விற்பனை பத்திரத்துக்காக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தில் 9 சதவீதம் மற்றும் கட்டுமான கட்டணமாக 4 சதவீதம் எனத் தோராயமாக ரூ.2.35 லட்சம் செலுத்தினால் போதுமானதாக இருந்தது.

தற்போதைய புதிய உத்தரவின்படி அடுக்குமாடிக் குடியிருப்பின் மொத்த விலையில் 9 சதவீத தனிப்பதிவு கட்டணத்தைக் கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது ரூ.50 லட்சம் மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்புக்கு 4.5 லட்சம் ரூபாய் அளவுக்கு தனிப்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குச் சரியான முறையில் கட்டணத்தை வசூலிக்கவும், முறைகேட்டைத் தடுக்கவும் இத்தகைய தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து சார்பதிவாளர்களுக்கும் இது குறித்த விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வால், அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளின் விலை அதிகரிக்க உள்ளது.