சென்னை:

ழக்கறிஞரை தாக்கிய புகாரின் பேரில் நடிகர் சந்தானம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தலைமறைவாகிவிட்ட அவர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் சந்தானம், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கண்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் சேர்ந்து முன்றாம் கட்டளையில் திருமண மண்டபம் கட்டுவதற்காக  மூன்று கோடி ரூபாய் முன்பணம் தந்ததாக கூறப்படுகிறது.

பணத்தை பெற்று கொண்ட நிறுவனத்தின் மேலாளர் சண்முக சுந்தரம், மண்டபத்தைக் கட்டித்தராமல் இழுத்தடித்து வந்தாராம்.  இந்த விவகாரம் குறித்து பேச  சண்முகசுந்தரத்தை சந்திக்க சந்தானம் சென்றுள்ளார். அப்போது அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது  அங்கு வந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் சண்முக சுந்தரத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாகியிருக்கிறது.

பிரேம் ஆனந்தை சந்தானம் அடித்துள்ளார். இதனால் அவர் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

தாக்கப்பட்ட வழக்கறிஞர் பாஜக தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.

தகவல் அறிந்ததும், பாஜகவினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க முழக்கமிட்டார்கள்.

இதற்கிடையே காயமடைந்த, வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதேநேரம் சந்தானமும், சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், அதன்பிறகு அவர் குறித்து தகவல் இல்லை எனவும் பேசப்படுகிறது.

சந்தானம் மீது வளசரவாக்கம் போலீசார் மூன்று3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சண்முகசுந்தரம், பிரேம் ஆனந்த் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பயந்து சந்தானம் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்ப, சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்தானம் சார்பில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.