சென்னை:

டசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி  மாதவரம் வல்லரசு இன்று அதிகாலை  என்கவுண்டர் செய்யப்பட்டார். முன்னதாக அவரை பிடிக்க சென்ற காவல்ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற நிலையில் அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டார்.

ரவுடி வல்லரசு மீது ஏற்கனவே பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் உள்ளன. இவனை கைது செய்ய மாதவரம் போலீசார் திட்டங்கள் தீட்டிவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், மாதவரம் பகுதியில் பதுங்கியிருந்த கொலை வழக்கு குற்றவாளி வல்லரசுவை நேற்று இரவு கைது செய்ய காவல்துறையினர் முயன்றபோது,  காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பவுன்ராஜை வெட்டிவிட்டு வல்லரசு தப்பிவிட்டார்.

இதையடுத்து,படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளர் பவுன்ராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றொரு காவல் ஆய்வாளரும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, வல்லரசுவை காவல்துறையினர் நள்ளிரவு முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில்,சென்னை மாதவரம் பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருந்த வல்லரசுவை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் அதிகாலை பரபரப்பை ஏற்படுத்தியது.