பெங்களூரு:

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு கோர்ட்டு  சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.  மேலும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்த, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து கர்நாடக  உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டதில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி மட்டும் தள்ளிவைக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால், அவரது பெயரை வழக்கில் இருந்து நீக்கும்படி கர்நாடக அரசு மனு தாக்கல் செய்ய உள்ளது.

இது குறித்து கர்நாடகா அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்ததாவது:

“சொத்து குவிப்பு வழக்கில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் இதை  உச்சநீதிமன்றத்துக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். எனவே இதற்கான சிறப்பு மனு ஒன்றை நாளை (செவ்வாய்க்கிழமை)  உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்ய உள்ளோம். அதில் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட தகவலை கூறி வழக்கில் இருந்து அவரை பெயரை எடுத்து விடும்படி வேண்டுகோள் விடுக்க  இருக்கிறோம்.

முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இறந்து விட்டாலும் மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். எனவே மற்ற மூவரின் பெயர்களும் தொடர்ந்து நீடிக்கும். அவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறும். அவர்கள் மூவரும் குற்றமிழைத்திருக்கிறார்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன” என்று ஆச்சாரியா தெரிவித்தார்.