புதுக்கோட்டை: சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு,  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது மனைவியுடன் நீதிமன்றத்தில்  ஆஜரானார்.


கடந்த 2011, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்நிலையில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான விசாரணை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில்  இன்று சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  வழக்கின் விசாரணைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது மனைவியுடன் வந்து  நீதிமன்றத்தில்  நேரில் ஆஜராகியுள்ளனர்.

 அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.விஜயபாஸ்கர் மீது  திமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.  அதன்படி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 60 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளதுடன் அவர் மற்றும் அவரது மனைவியின் மீது எப்ஐஆர் பதிவு செய்யதுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரின் வீடு, அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர். திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவக்கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். காவல்துறையினர் சோதனை நடத்தி பல மாதங்களுக்குப் பிறகு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விஜயபாஸ்கர் மீது 216 பக்கத்திலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது