சென்னை: சட்டப்பேரவைக்குள் திமுக குட்கா கொண்டு வந்த விவகாரம்  தொடர்பாக உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸ் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சபாநாயகர் அனுமதி இன்றி கொண்டு வந்ததாக பேரவை உரிமைக்குழு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தடை விதிக்கக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த,  தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது. எனினும் தவறுகளை களைத்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என தெரிவித்திருந்தது.

இதையடுத்து, உரிமைக்குழு கூடி மீண்டும் அனுப்பிய 2வது நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏக்களும், தி. மு.க விலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கு.க செல்வமும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்த நிலையில் இடைக்கால தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி விசாரணை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு  நடைபெற்றது. இந்த வழக்கில், சட்டப்பேரவை செயலாளர் சார்பில் அரசின் மூத்த வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி வாதிட்ட நிலையில், இன்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உரிமைக்குழு சார்பில் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவுப்படி, ஏற்கனவே வழங்கப்பட்ட நோட்டீஸில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டு,உரிமை குழு புதிய நோட்டீஸை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார். குட்கா பொருளை காண்பித்ததற்காக என திருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த சபாநாயகர், உரிமைக்குழுவை விசாரிக்க உத்தரவிட்டதாகவும், அதன் பேரிலேயே தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எந்தெந்த பொருட்களை கொண்டு வருவதற்கு முன் அனுமதி பெற வேண்டுமென ஏதேனும் வழிமுறை உள்ளதா என கேள்வி எழுப்பிய நிலையில், எது உரிமை,எது உரிமை மீறல் என்பதற்கு ஏதும் பாராளுமன்றத்தாலோ, சட்டமன்றத்தாலோ வரையறை செய்யப்படவில்லை எனவும், மரபு மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் அடிப்படையில் அவை முடிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுது புகை பிடிக்க கூடாது என எந்த விதியும் இல்லாதபோதும், அது நீதிமன்றத்தில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கம் என்பதைப் போல் தான் சட்டமன்ற நடவடிக்கையும் என தெரிவித்தார். பேச்சுரிமை என்ற போர்வையில், தடை செய்யப்பட்ட பொருளை ஊக்குவிக்கும் வகையிலான செயலை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளதாகவும், இது சட்டப்பேரவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் எனவும் தெரிவித்தார்.

உரிமைக்குழு அதன் முடிவை பேரவையில் தாக்கல் செய்யும் எனவும், அதன் பின்னர் பேரவை தான் இதில் இறுதி முடிவெடுக்கும் என தெரிவித்த அவர், பேரவையின் இறுதி முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்கு தொடரும் பட்சத்தில், அப்போதுதான் இதில் நீதிமன்றம் தலையிட முடியும் எனவும், தற்போது இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லையென வாதிட்டார்.

தொடர்ந்து, அரசு தரப்பின் வாதத்திற்கு விளக்கமளித்த திமுக தரப்பு வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம்,என்.ஆர் இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி மற்றும் கு.க செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர். உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீசை தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்தபோது, இந்த விவகாரம் நடந்து (2017) மூன்றாண்டுகள் ஆகி விட்டதால், அதனை அடிப்படையாக வைத்து தற்போது தண்டிக்க முடியாது என தெரிவித்திருந்ததாகவும், தற்போதைய நிலையிலும் தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவை பொருத்திப் பார்க்க வேண்டுமென வாதிட்டனர். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.