சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 -ம் ஆண்டு செப்டம்பர் 22 -ம் தேதி சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 5 -ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்ததாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 6 -ம் தேதி அன்று ஜெயலலிதா, மெரினா கடற்கரை அருகே அடக்கம் செய்யப்பட்டார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதனையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது.

கடந்த வாரம் எயம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை அளித்த நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி இன்று முதல்வரை சந்தித்து, இறுதி அறிக்கை அளிக்க உள்ளதாக, ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.