பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நடிகை ரியா, அவரது தம்பி ஷோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக் காரர் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கைதான ரியா உள்ளிட்டோர் கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சாரா அலி கான், தீபிகா படுகோன், ஷிரத்தா கபூர் ஆகிய 4 பேருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் (என்சிபி) நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். 4 பேரையும் வரும் 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் :-

“ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தேன், திரைத்துறையில் பெண்கள் மட்டும் தான் போதை மருந்து பழக்கம் இருப்பவர்களா, ஆண்கள் கிடையாதா? இல்லையென்றால் பெண்களை மட்டும் தான் கேள்வி கேட்டு விசாரணை செய்து, சம்மன் அனுப்பி, அவதூறு பேசவேண்டும் என்பது விதியா. இந்த வழக்கம் எனக்குப் புரியவில்லை” என தெரிவித்துள்ளார் .