மதுரை:

ப்ரல் 18ந்தேதியன்று,  மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடை பெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல்-18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அன்றைய தினம் மதுரை  சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. அதுபோல ஏராளமான கோவில்களிலும் அன்று திருவிழா நடைபெறுகிறது. அத்துடன் கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

இதன் காரணமாக தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

ஆனால், தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இன்று மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ,  தேர்தல் நாளில் மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்து உள்ளார்.

மதுரையில் சித்திரை திருவிழாவை கருத்தில்கொண்டு வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக கூறியர்,  மதுரை பாராளுமன்ற தொகுதியில் மட்டும்,  ஏப்ரல் 18ம் தேதி அன்று, வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் மதுரை தவிர்த்த மற்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வழக்கம்போல் வாக்குப்பதிவு நடைபெறும்.