வெண்ணிலா கபடி குழு,தொடங்கி ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் அப்புக்குட்டி. வீரம் படத்தில் அஜீத்துடன் நடித்திருந்தார். அவர் கூறிய தாவது:
கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கி றோம் நம் எல்லோரின் வேண்டுதலும் இப்போது, கொரோனா ஒழிய வேண்டும். எல்லோரும் லாக்டவுனில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதுதான். விரைவில் இது நடக்கும் என்று நம்புவோமாக…


கொரோனாவால் எல்லா தொழில்களைப் போல, திரைப்படத்தொழிலும் முடங்கித்தான் கிடக்கிறது. இக்காலகட்டத்தில் நமக்கிருந்த ஒரே பொழுது போக்கு சினிமாவும் சமூக ஊடகங்களும்தான். இச்சூழலில் நான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ படம் வரும் ஆகஸ்ட் 15-ல் வெளிவருகிறது. அதுவும் ஆன்லைன் தளத்தில் வெளிவர இருக்கிறது.வீட்டில் முடங்கிக் கிடந் தாலும் உங்களை உயிர்ப்போடு வைத்திருந்தது சினிமாவும் உறவுகளும்தான். அந்த சினிமா வழியே உங்களை, உங்கள் வீட்டிற்கே வந்து இப்படத்தின் மூலம் சந்திக்க இருக்கிறேன்.
‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம், 80-20 பிக்சர்ஸின் திருநாவுக்கரசு தயாரிப்பில், யதார்த்த சினிமாக்களால் திரைக்குள் ஈர்க்கப்பட்டு, சரவண சுப்பையாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜா.ரகுபதி இயக்கத்தில், நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இத்திரைப்படத்தில் நாயகனாக பாலாஜி அறிமுகமாகிறார். சசிகுமாரின் ‘கிடாரி’, கார்த்தியின் ‘தம்பி’ படத்தின் நாயகியான நிகிலா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சூர்யா நடித்த ‘காதலே நிம்மதி’ படத்தின் இயக்குநர் இந்திரன், இதுவரை யாரும் பார்த்திராத வேடத்தில் வருகிறார். இப்படத்திற்கு இசை சார்லி, ஒளிப்பதிவு கொளஞ்சி குமார், படத்தொகுப்பு தீனா.
இத்திரைப்படம் கிராமத்தில் போக்கிரியாகத் திரிந்துகொண்டு, கோலி குண்டு விளையாடிக் கொண்டு திரியும் இளைஞனின் கதை. அவனுடைய வாழ்வில் ஒரு பெண் நுழைகிறாள்… அதனால் அவனுடைய வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன? அப்பெண்ணின் வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன? என்பதை சொல்லும்படம் இது. சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லரோடு இப்படத்தின் கிளைமாக்ஸை முடித்திருக்கிறார் இயக்குநர் ஜா.ரகுபதி.
கொரோனா காலத்தில் எப்படி பட ரிலீஸ் சாத்தியம் என்று கேட்டால், தயாரிப்பாளர் சி.வி.குமார் ரீகல் டாக்கீஸ் என்ற ஆப்ஸினை உருவாக்கி, அதை ஒரு ஆன்லைன் தியேட்டராக மாற்றி இருக்கிறார். இந்த ஆன்லைன் தியேட்டரில் வாரம் ஒரு புதுப்படம் வெளியாகும். அப்படம் வெளிவரும் சமயத்தில், ஆன்லைனில் டிக்கெட் வாங்கி, உங்கள் வீட்டிலேயே அமர்ந்து, ஒரு டிக்கெட்டில் குடும்பத்தினர் அனைவரும் கண்டு மகிழலாம். இதுதான் ஆன்லைன் தியேட்டர். ஆகஸ்ட் 15-அன்று காலை 9 மணிக்கு ரீகல் டாக்கிஸ் ஆப்ஸின், ஆன்லைன் தியேட்டரில் எங்களின் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம் வெளியாகிறது. ஆன்லைனில் டிக்கெட் வாங்கி படத்தைப் பாருங்க… நீங்கள் தரும் ஆதரவால், எங்களைப் போன்ற திரைக்கலைஞர்கள் வாழ்வு வளம் பெறும். தமிழ் சினிமா வளரும்.
இவ்வாறு அப்புக்குட்டி கூறி உள்ளார்.