சென்னை:  உதவி வேளாண்மை அலுவலர்கள் பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 391 உதவி வேளாண்மை அலுவலர் / உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று வழங்கி வாழ்த்தினார்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “உழவர்களின் நலன் காத்திட வேளாண்மைத் துறையினை, வேளாண்மை – உழவர் நலத் துறை எனப் பெயர் மாற்றம் செய்து, உழவர்களின் வருவாயைப் பெருக்கிட வேளாண்மை – உழவர் நலத் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்தது.

தமிழ்நாட்டில் உள்ள வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.

வேளாண் துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும், வேளாண்மை, தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, இத்துறைகளில் காலியாக உள்ள 161 உதவி வேளாண் அலுவலர், 230 உதவித் தோட்டக் கலை அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, ஐந்து உதவி வேளாண் அலுவலர் பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும், ஐந்து உதவித் தோட்டக்கலை அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை ஸ்டாலின் வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.