சென்னை: தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் 25% அரசு ஒதுக்கீட்டில் சேர்க்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்க பல்வேறு உதவிகளை தமிழ்நாடு அரசு செய்து வந்தாலும், மக்கள் மனதில் அரசு பள்ளி என்றாலே ஒரு ஏளனம்தான் தெரிகிறது. இதனால், நகர்ப்புறங்களில் பெரும்பாலோர் தனியார் பள்ளிகளையே நாடுகின்றனர். ஏன், அரசு ஊழியர்களும், அரசு பள்ளி ஆசிரியர்களும்கூட தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பது இல்லை.  இதனால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஓகோவென் இருந்து வருகிறது.   அதையொட்டி  கல்வி பெரும் வியாபாரமாகவே மாறி உள்ளது. பல லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையிதான்,  குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி,  தனியார் பள்ளிகளிலும் கட்டணமின்றி  படிக்க 25 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்வது கட்டாய மாக்கப்பட்டது. அதன்படி,  தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கும் பெற்றோர்கள், அதுதொடர்பாக விண்ணப்பித்து, கட்டணமின்றி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கலாம்.

அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கு (2024/25)  தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க விருப்புபவர்கள்,  இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என  தனியார் பள்ளிகள் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் மே 20ம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் –

எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1 ம் தேதி முதல், 2021 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 2019 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டார வள மைய அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காக விபரத்தையும் மே 27ம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மே 28ம் தேதி குலுக்கல் நடத்தி குழந்தைகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசால் ரூ.400 கோடி தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.