சென்னை:  சுமார் 170 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து  அபகரித்த வழக்கில், திமுக எம்பி ஜெகத்ரட்சகனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விடுவித்த நிலையில், அதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட நபர்,  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஏராளமான அவதூறு வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. அதைத்தொடர்ந்து, பல்வேறு அமைச்சர்கள் மீதான வழக்குகள் கீழமை நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கை நீதித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், பொதுமக்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற ஒரு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் தற்போது செந்தில் பாலாஜி, புழல் சிறையில் உள்ளார்.

இதற்கிடையில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல், அமைச்சர்கள் பொன்முடி மீதான நில அபகரிப்பு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், வளர்மதி போன்றோர் தங்கள்மீதான வழக்குகளில் விடுவிக்கப்பட்டதும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பையும், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் நடவடிக்கையையும் கடுமையாக விமர்சனம் செய்ததுடன், தானாகேவ முன்வந்து வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த நிலையில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன்மீதான போலி ஆவணம் தயாரித்து, நிலம் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து பாதிக்கப்பட்ட நபர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 1995ம் ஆண்டு, முன்னாள் மத்திய அமைச்சரும்,  தற்போதைய அரக்கோணம் தொகுதி திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன்  போலி ஆவணங்கள் மூலம், சுமார் 170 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. அரசு கையகப்படுத்த வேண்டிய நிலத்தை முறைகேடான ஆவணங்களை தயாரித்து 1 அபகரித்து, அதனை வீட்டு மனைகளாக விற்பனை செய்து  ரூ. 1700 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் ஈட்டியதாக ஜெகத்ரட்சகன் மீது புகார் அளிக்கப்பட்டது.

அதாவது, சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வந்த குரோம் லெதர் தொழிற்சாலை என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை 1982ல் நில நகர்ப்புற நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு எடுத்திருந்தது. இதன் பின் திமுக எம்பியான ஜெகத்ரட்சகன் கடந்த 1995-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பங்குகளை தனது அதிகாரத்தின் மூலமாக முறைகேடாக வாங்கியதாகவும், அதேபோல சுமார் 170 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து அபகரித்ததாக டாவ்சன் என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஜெகத்ரட்சகன் தாக்கல் மனுவை ஏற்றுக்கொண்டு, அவர் மீதான அனைத்து வழக்குகளையும் வழக்கை ரத்து செய்து கடந்த நவம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாவ்சான் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டாவ்சான் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,  இந்த விவகாரத்தில் உடனடியாக உச்சநீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்! உயர்நீதிமன்ற நீதிபதி ‘ஓப்பன் டாக்..!’