சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பாடங்கள் குறைக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளி இறுதி தேர்வுகிடையாது, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டிலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  பள்ளி இறுதி தேர்வு இருக்காது என தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அறிவித்துள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என பரவும் தகவல் தவறானது என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, மே 6 முதல் மே 13-ஆம் தேதிக்குள் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.