கோவை

மிழக பாஜக தலைவர் தனது வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார். 

நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கிக் கடந்த 7 நாட்களாக அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவைக் கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமாரிடம் அண்ணாமலை வழங்கினார். அவருடன் பா.ஜ.க. முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் உடன் இருந்தனர்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது. அவருக்கு அசையும் சொத்து ரூ.36 லட்சமும், அசையா சொத்து ரூ.1.12 கோடியும் இருப்பதாகப் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணாமலையின் மனைவி அகிலாவின் பேரில் ரூ.2 கோடி மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.53 லட்சம் மதிப்பிலான அசையா சொத்தும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.