தஞ்சாவூர்,

ஞ்சாவூரில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்பேரறிஞர் அண்ணா 109 ஆவது பிறந்தநாள் மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது.

தீர்மானம் : 1

உலகின் உயர்ந்தோங்கிய மக்கள் ஆட்சி நாடாகத் திகழும் இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பது, வேற்றுமையில் ஒற்றுமையும், நாட்டின் பன்முகத் தன்மையும்தான் என்பதை மறுக்க முடியாது. ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பாரதிய ஜனதா கட்சியினர், நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள காரணத்தால் தாங்கள் நினைத்ததை யெல்லாம் செயற்படுத்தி வருகின்றார்கள்.

ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே நாடு எனும் இந்துத்துவக் கருத்தியலை நடை முறைப்படுத்தும் வகையில்தான், கடந்த மூன்று ஆண்டுக் கால மோடி ஆட்சியின் செயல்பாடுகள் இருக்கின்றன.

சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல், சகிப்பு இன்மை, மதவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த சிந்தனையாளர்கள் நரேந்திர தபோல்கர். எம்.எம். கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலை, பசுவதைத் தடுப்பு எனும் பெயரால் நடத்தி வரும் வன்முறைகள், அரசியல் சட்டத்தின் முகப்புரையில் இருந்து மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகியவற்றை நீக்க முயற்சி, இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் நியமனம்,

காவிமயமாகும் கல்வித்துறை, இந்தி, சமஸ்கிருத மொழிகள் திணிப்பு, சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகள், இந்தியாவின் கூட்டு ஆட்சிக் கோட்பாட்டுக்கு எதிரான மத்திய அரசு நிர்வாகம், இந்துத்துவா, வலதுசாரிக் கொள்கைகளுக்கு ஏற்ப இயதியாவின் தனித்துவமான வெளியுறவுக் கொள்கையை மாற்றுதல், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்காத போக்கு போன்ற நடவடிக்கைகள் நாட்டை அச்சுறுத்துகின்றன.

இந்துத்துவ சக்திகளின் பிடியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் சிக்கியுள்ளதைப் போன்று தமிழ்நாட்டையும் ஆதிக்கம் செலுத்த மதவெறிக் கூட்டம் எல்லா விதமான முயற்சிகளிலும் இறங்கி உள்ளது. தமிழக அரசியல் குழப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு திராவிட இயக்கத்தைச் சாய்த்து விடலாம் என்று சங் பரிவாரக் கும்பல் பகல் கனவு காண்கின்றது.

டாக்டர் சி. நடேசனார், சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகிய மூல வேர்களான மூன்று தலைவர்கள் வழிநடத்திய திராவிட இயக்கம் நூற்றாண்டு விழா கண்ட பேரியக்கம் ஆகும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் அரும்பணிகளால் அசைக்க முடியாத ஜிப்ரால்டர் கோட்டையாகத் திகழ்கின்றது.

திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்கு இந்துத்துவ மதவெறிச் சக்திகளின் ஆக்டோபஸ் கரங்கள் தமிழ்நாட்டைச் சுற்றிவளைப்பதற்கு ஒருபோதும் இடம் அளிக்கக் கூடாது என்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கின்றது.

திராவிடப் பேரியக்கத்தின் அடிப்படை இலட்சியங்களான சமூக நீதி, மொழி, இன, பண்பாட்டு உரிமைகள் பாதுகாப்பு, மதச்சார்பற்ற தன்மை, மாநில சுயாட்சி போன்றவற்றை முன்னெடுத்துச் சென்றிடவும், தமிழ்நாட்டில் கால் ஊன்ற நினைக்கும் இந்துத்துவக் கூட்டத்தின் முயற்சிகளை முறியடிக்க, அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டின் மூலம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி ஏற்கின்றது.

தீர்மானம் : 2

சமூக நீதிக் கொள்கையில் இந்திய நாட்டுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்வது திராவிட இயக்கம்தான் என்பது வரலாற்று ஏடுகளில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு இருக்கின்றது. நீதிக்கட்சி, சென்னை மாகாணத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த காலகட்டத்தில்தான் 1928-இல் வகுப்பு உரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டு, இடஒதுக்கீடு என்பது சட்டப்பூர்வமாக்கப்பட்டது. அதன் பின்னர்தான், இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடு உரிமை, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய பிரிவு மக்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26-இல் நடைமுறைக்கு வந்த பின்னர் சென்னை மாகாணத்தில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டப் பிரிவுகள் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் சமூக நீதிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு அளித்தது. அதே தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட இயக்கம் போராடியது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, அரசியல் சட்டத்தின் முதல் திருத்தமாக இட ஒதுக்கீடு உரிமையை நிலைநாட்டும் வகையில் சட்டப் பிரிவு 15-இல் 4-ஆவது பிரிவு சேர்க்கப்பட்டது என்பது சமூக நீதி வரலாறு ஆகும்.

திராவிட இயக்கம் போராடிப் பெற்றுத் தந்த சமூக நீதி உரிமையைத் தட்டிப் பறிக்கும் வகையில் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. மருத்துவக் கல்வி பயில்வதற்கு தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (NEET) கட்டாயமாக்கப்பட்டு இருப்பது அநீதி ஆகும்.

மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று சென்னைப் பல்கலைக்கழகச் சட்ட விதிகளில் இருந்ததை நீக்கி உத்திரவிட்டது நீதிக்கட்சி அரசின் சாதனை ஆகும். அன்று சமஸ்கிருதம் இருந்ததைப் போல இன்று ‘நீட்’ நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்து இருப்பது கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாக ஆக்கிடும் சதித்திட்டம் ஆகும்.

‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2017 பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டது வன்மையான கண்டனத்துக்கு உரியது.‘

மத்திய பாடத்திட்டத்தின்கீழ் ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால், கிராமப்புற ஏழை, பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்கள் போதிய பயிற்சி இன்றி ‘நீட்’ நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் பின்னடைந்தனர். பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்று இருந்த அரியலூர் மாணவி அனிதா, போதிய பயிற்சி இன்மையால் ‘நீட்’ தேர்வில் வெறும் 86 மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது.

மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கின் காரணமாக அரியலூர் மாணவி அனிதா உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டு விட்டது.  அனிதா போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவை பா.ஜ.க. அரசு,‘நீட்’ நுழைவுத் தேர்வின் மூலம் தவிடுபொடியாக்கி இருக்கின்றது.

இனி இலட்சக்கணக்கில் செலவு செய்து ‘நீட்’ தேர்வுக்குத் தனிப் பயிற்சி பெறுபவர்கள் மட்டுமே, மருத்துவக் கல்விக்குப் போட்டியிட முடியும். இந்நிலைமை பின்தங்கிய ஒடுக்கப்பட்ட பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த எளிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு வாய்ப்பைப் பறிக்கும் அக்கிரமமான மோசடி சதித்திட்டம் ஆகும்.

எனவே, மருத்துவப் படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு கட்டாயம் எனும் நிலையில் இருந்து தமிழ்நாட்டுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், வரலாறு காணாத போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலைமை உருவாகும் என இந்த மாநாடு எச்சரிக்கை செய்கின்றது.

தீர்மானம் : 3

பல்வேறு தேசிய இனங்கள், மொழி, பண்பாடு, கலாச்சாரத்தைக் கொண்டுள்ள இந்தியாவில் ஒரே கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்துத்துவா சங் பரிவாரங்கள் புதிய கல்விக் கொள்கையைத் திணிக்க விரும்புகின்றன.

மருத்துவக் கல்விக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வு புகுத்தப்பட்டது போன்று, பொறியியல் கல்விக்கும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வர வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை வரையறுக்கின்றது.
மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து கல்வித் துறையைக் காவிமயமாக்கித் தனியாருக்குத் தாரை வார்த்து ஏகபோக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் மத்திய அரசிடம் இருந்து கல்வித் துறையை முழுமையாக மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அப்போதுதான் கல்வித் துறையில் மாநிலங்கள் தன்னாட்சியுடன் செயல்பட முடியும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 4

வாழி அவன்தன் வளநாடுமகவாய் வளர்க்கும் தாயாகிஊழி உய்க்கும் பேருதவிஒழியாய் வாழி காவிரி ’ “சோழ வளநாட்டைத் தன் பிள்ளையாகக் கருதி காவிரித் தாய் வளர்க்கின்றாள்; ஊழிதோறும் இப்பேருதவியை நிறுத்திக் கொள்ளாத காவிரியே நீ வாழ்க!” என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பாடினார்.

“காவிரி நாடன்ன கழனி நாடு” என்று கம்பர் போற்றினார். இத்தகைய சிறப்பு பெற்று இருந்த சோழ வளநாடு, காவிரியில் நீர் இன்றி வறண்ட பாலைவனமாக மாறி வருகின்ற நிலைமை உருவாகியுள்ளது.

காலம் காலமாகத் தமிழகம் அனுபவித்து வருகின்ற காவிரி மரபு உரிமையைத் தடுக்கும் வகையில் கர்நாடக மாநிலம் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி செயற்படுவதும், அதற்கு மத்திய பா.ஜ.க. அரசு துணை போவதும் கண்டனத்திற்கு உரியது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டியது கர்நாடக மாநிலத்தின் கடமை ஆகும். இதனை உறுதி செய்யவே காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும் என்று இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டது.

பிப்ரவரி 5, 2007-இல் தீர்ப்பு வெளியாகி பத்து ஆண்டுகள் ஆன பின்னரும் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்திட மத்திய அரசு முயற்சிக்காதது மட்டும் இன்றி, உச்சநீதிமன்றம் உத்திரவிட்டும்கூட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று கூறி வருவது தமிழகத்திற்கு மோடி அரசு செய்து வரும் பச்சைத் துரோகம் ஆகும்.

தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரி மரபு உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைத்திட உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தஞ்சைத் தரணியில் நடைபெறும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 5

அரசியல் அமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்காத கர்நாடக மாநிலம், உச்ச நீதிமன்றம் பிறப்பித்து வரும் ஆணைகளையும் அலட்சியப்படுத்தி வருவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு, இராசிமணலில் தடுப்பு அணைகள் கட்டும் திட்டத்திற்கு 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடக மாநில அரசு, தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி அணைகள் கட்டும் பணியில் இறங்குவோம் என்று அறிவித்துள்ளது.

1965-ஆம் ஆண்டில் இருந்து காவிரி நீர் பங்கீடு தொடர்பான 1892 மற்றும் 1924- ஆம் ஆண்டுகளின் ஒப்பந்தத்தை மீறி அணைகளைக் கட்டி தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரைத் தடுத்து வருகின்றது. சுவர்ணவதி, ஹேமாவதி, கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகர் – வருணா கால்வாய், யாகச்சி போன்ற அணைகள் கட்டியும், நீர்ப்பாசனத் திட்டங்களை விரிவுபடுத்தியும் வந்த கர்நாடக அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் புதிதாக மூன்றாயிரம் ஏரிகளை உருவாக்கிப் பாசனப் பரப்பை பன்மடங்கு அதிகரித்து இருக்கின்றது.

1974-இல் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு வெறும் 6.8 இலட்சம் ஏக்கர்தான் இருந்தது. காவிரி நடுவர் மன்றம் 1991-இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம் தனது பாசனப் பரப்பை 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யக் கூடாது என்று தெரிவித்தது. ஆனால், 1991-ஆம் ஆண்டுக்குப் பின்னரும் பாசனப் பரப்பை கர்நாடக அரசு அதிகரித்து வந்தது.

2007-இல் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் கர்நாடக அரசு விரிவுபடுத்திய பாசனப் பரப்பையும் உள்ளடக்கி மொத்தம் 18.85 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பாசனப் பரப்பாகத் தீர்மானித்து உத்திரவிட்டது.
ஆனால், அதற்குப் பிறகும் கர்நாடகம் தனது காவிரி பாசனப் பரப்பை 21 இலட்சம் ஏக்கராக அதிகரித்தது மட்டும் அன்றி, அடுத்த ஐந்து ஆண்டுக் காலத்தில் 30 இலட்சம் ஏக்கராக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்து இருக்கின்றது.

ஆனால், தமிழகத்தில் 1971-இல் காவிரிப் பாசனப் பரப்பு 25.03 இலட்சம் ஏக்கராக  இருந்ததை நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் 24.71 இலட்சம் ஏக்கர் என்று குறைத்தது. முப்போகம் சாகுபடி நடந்த காவிரிப் படுகையில் தற்போது ஒருபோக சாகுபடி செய்வதற்குக் கூட நீர் இன்றி வேளாண்மைத் தொழில் கேள்விக்குறியாகி விட்டது.

இந்நிலையில், காவிரியின் குறுக்கே கர்நாடகம் தடுப்பு அணைகள் கட்டுமானால் இனி ஒரு சொட்டு நீர் கூடத் தமிழகத்திற்குக் கிடைக்காது. உச்ச நீதிமன்றத்தில் காவிரி தொடர்பான வழக்கில் தமிழக அரசு உரிய முறையில் தமிழகத் தரப்புக் கருத்துகளை முன் வைக்க வேண்டும். ஏனெனில் ஆகஸ்டு 17-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் நேர்நின்ற வழக்கறிஞர், கர்நாடகம் வஞ்சகமான முறையில் எடுத்துரைத்த வாதத்தை ஏற்றுக் கொண்டு, தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்குமானால் கர்நாடகம் தடுப்பு அணைகள் கட்டிக் கொள்ளலாம் என்று முரணாகத் தெரிவித்து இருந்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தமிழக அரசின் இக்கருத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது மட்டுமின்றி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் ஆகஸ்டு 21-ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

எனவே, தமிழக அரசு காவிரிப் பிரச்சினையில் மிகவும் கவனமாக நமது தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என்றும், கர்நாடகம் காவிரியின் குறுக்கே எக்காரணம் கொண்டும் அணைகள் கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 6

காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தைச் செயற்படுத்த 2011-ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்தது. கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மீத்தேன் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்று முதன் முதலில் அறிக்கை வெளியிட்டார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் மீத்தேன் திட்டத்தால் வளம் கொழிக்கும் காவிரிப் படுகை பாலைவனப் பிரதேசமாகும் என்பதை மக்களிடம் எடுத்துரைத்தார்.

2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  முழுவதும் காவிரிப் பாசன மாவட்டங்களில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தின் பேராபத்துகள் குறித்து விவசாயிகள், பொது மக்களிடையே விழிப்புணர்வுப் பரப்புரைப் பயணம் செய்து, மீத்தேன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்திலும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக வாதாடினார்.

பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் உத்திரவின்படி தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்து, அதன் பரிந்துரையின் அடிப்படையில் மீத்தேன் திட்டத்திற்கான அனுமதியை இரத்து செய்வதாக அப்போதைய தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் 2013-இல் அறிவித்தார். மீத்தேன் எரிவாயுப் பணிகளுக்காக கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேஷனுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

2017, பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு போன்ற திட்டங்களுக்கு ஒருங்கிணைந்த ஒரே உரிமம் அளிப்பது என்று நரேந்திர மோடி அரசு முடிவு எடுத்தது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த 22 நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் காவிரிப் படுகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இயற்கை எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு நிறுவனமான இந்திய இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி) மூலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் ஆய்வை மேற்கொள்வதை எதிர்த்து பொது மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. நெடுவாசல், கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இரத்து செய்யக் கோரி பொது மக்கள் கடந்த 5 மாத காலமாகத் தொடர்ச்சியாகப் போராட்டக் களத்தில் இறங்கி உள்ளனர்.

தமிழக அரசு, மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் மற்றும் பாறைப் படிம எரிவாயு எனும் ஷேல் எரிவாயுத் திட்டங்களுக்கு மறைமுகமான ஆதரவை வழங்கி வருவது மட்டுமின்றி, இத்திட்டங்களை எதிர்த்துப் போராடும் பொது மக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை அடக்குமுறை மூலம் போராட்ட எழுச்சியைத் தடுப்பதற்கு முயற்சியும் செய்வது கண்டனத்துக்கு உரியதாகும்.

மேலும், கடலூர், நாகை மாவட்டங்களைப் பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலமாக அறிவித்து, இதற்காக 45 ஊர்களில் சுமார் 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு ஜூலை 17-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு 318 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைத்து பெட்ரோலியம், பெட்ரோலிய இரசாயனப் பொருட்கள் தொழிற்சாலை, கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக மையங்கள் அமைக்கத் திட்டமிட்டு இருக்கின்றது.

வளம் கொழிக்கும் காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாலைவனமாக மாற்றும் இத்தகைய திட்டங்களை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மக்களின் எதிர்ப்பை மீறி இத்திட்டங்களைச் செயற்படுத்த முயன்றால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு சுட்டிக்காட்டுவதுடன், காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 7

மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக இருந்துவரும் நதிநீர்ச் சிக்கல்களுக்குத் தீர்வு காண, நிரந்தரத் தீர்ப்பு ஆயம் அமைப்பதற்கு மார்ச் 14, 2017-இல் சட்ட முன்வடிவு ஒன்றை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கின்றது.

“தண்ணீர்ப் பிரச்சினை வழக்குகளை அதிகபட்சம் நான்கரை ஆண்டுகளுக்குள் முடித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்படும்; இந்தத் தீர்ப்பு ஆயத்தின் அமர்வு அளிக்கும் தீர்ப்பே இறுதியானது” என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்து இருக்கின்றார்.

நிரந்தரத் தீர்ப்பு ஆயம் அமைக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தால் தற்போது இருக்கும் காவிரி நடுவர் மன்றம் உள்ளிட்ட எட்டு தீர்ப்பு ஆயங்களும் இந்தப் புதிய தீர்ப்பு ஆயத்துடன் இணைக்கப்பட்டு விடும். இப்போதுள்ள எட்டு நடுவர் மன்றங்களில் கோதாவரி, கிருஷ்ணா, நர்மதை ஆகிய மூன்று நடுவர் மன்றங்கள் 1969-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் இந்த நடுவர் மன்றங்கள் 6 முதல் 48 ஆண்டுகளாக நதிநீர்ப் பிரச்சினை வழக்குகளை விசாரித்தும் இதுவரையில் தீர்வு காண முடியவில்லை.

காவிரி நடுவர் மன்றம் 1990-இல் அமைக்கப்பட்டு, 17 ஆண்டுகள் விசாரணை செய்து 2007 இல்தான் இறுதித் தீர்ப்பு அளித்தது. பத்து ஆண்டுக் காலம் ஆகியும் இன்னமும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. இந்நிலையில் நிரந்தரத் தீர்ப்பு ஆயம் அமைத்து, நான்கரை ஆண்டுகளில் தீர்வு காணப்படும் என்று மத்திய அரசு கூறுவது நடைமுறையில் சாத்தியம் இல்லை.

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளித்துவிட்ட பின்னர், மீண்டும் நிரந்தரத் தீர்ப்பு ஆயத்தில் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையைக் கொண்டு செல்வதால், இன்னும் பல ஆண்டுகள் காவிரிப் பிரச்சினையில் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுத்தடிக்கப்படும் நிலை ஏற்படும்.

காவிரிப் பிரச்சினைக்கு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைச் செயற்படுத்துவது ஒன்றுதான் மத்திய அரசின் பொறுப்பும் கடமையும் என்பதை உணர வேண்டும் என்று இம்மாநாடு சுட்டிக் காட்டுவதுடன், நிரந்தரத் தீர்ப்பு ஆயம் அமைத்திட நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 8

பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக மாநிலம் வஞ்சித்ததாலும் காவிரிப் பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த பயிர்கள் கருகியதைத் தாங்க முடியாமலும், கடன் சுமையாலும் செய்வதறியாது தவித்த விவசாயிகள் முந்நூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர்.

தமிழக அரசு விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. ஆனால், 5 ஏக்கர் வரையில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே இச்சலுகை என்றும், ஜூன் 28, 2016-இல் தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையில் மார்ச் 31, 2016 வரையில் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தது.

தமிழக அரசு 16 இலட்சத்து 94 ஆயிரத்து 145 விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு வங்கிகளின் கடன் தொகை 5,780 கோடி ரூபாய் இரத்து செய்து இருக்கின்றது. கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள மேலும் 3 இலட்சத்து 926 விவசாயிகளின் 980 கோடி ரூபாய் கடன் தொகையைத் தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பாரபட்சம் பாராமல் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஏப்ரல் 4, 2017-இல் உத்திரவிட்டது.

ஆனால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய உத்தரவுக்குத் தடை ஆணை பெற்றது நியாயமானது அல்ல. விவசாயிகளின் வேதனையைப் புரிந்து கொண்டு அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்திட மத்திய அரசு நிதி உதவி அளிக்காது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து இருக்கின்றார்.

ஆந்திர மாநிலம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருக்கும் கடன்களை மாநில அரசுகளே தள்ளுபடி செய்துள்ளன. தமிழக அரசும், விவசாயிகளின் நெருக்கடிகளை உணர்ந்து, வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்குத் தேவையான நிதி ஆதாரத்தை மத்திய அரசிடம் இருந்து வாதாடிப் பெற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 9

கடந்த மூன்று ஆண்டுகளாகக் கரும்பு விவசாயிகள் பல கட்டங்களாகப் போராடியும் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகை இரண்டாயிரம் கோடி ரூபாயைப் பெற்றுத் தருவதற்கு தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது ஆகும். உடனடியாக கரும்புக் கொள்முதல் நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு விரைவில் கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, நடப்பு ஆண்டுக்கு, கரும்பு  டன் ஒன்றுக்கு ரூ, 4,000/- என்று கொள்முதல் விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 10

தமிழகத்தில் சுற்றுச்சூழலைக் கெடுத்தும், நிலத்தடி நீரை உறிஞ்சியும் கேடு விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை முற்றாக அகற்ற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் செப்டம்பர் 9, 2015-இல் ரிட் மனு தாக்கல் செய்தார்.

பல்வேறு அமர்வுகளில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது வைகோ அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேர் நின்று, சீமைக் கருவேல மரங்களால் ஏற்பட்டு வரும் ஆபத்துகளை எடுத்துரைத்தார்.

இந்த வழக்கில் பிப்ரவரி 27, 2017-இல் மாண்பமை நீதிபதிகள் செல்வம் மற்றும் கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சீமைக் கருவேல மரங்களை அகற்றத் தமிழக அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் உத்திரவிட்டது.

எனவே, தமிழக அரசு தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்குக் கீழே போய்க் கொண்டு இருப்பதைக் கருத்தில் கொண்டும் உடனடியாக சீமைக் கருவேல மரங்களைப் பூண்டோடு அழிக்க சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 11

கலிங்கப்பட்டி ஊராட்சியில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி அன்னை மாரியம்மாள் அவர்கள் தலைமையில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1-ஆம் தேதி ஆயிரக்கணக்கான பொது மக்கள் உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தினார்கள். 2015 ஆகஸ்டு 2-ஆம் தேதி காவல்துறையின் பாதுகாப்புடன் கலிங்கப்பட்டியில் மதுக்கடை திறக்கப்பட்டதை எதிர்த்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் எழுச்சிப் போராட்டம் நடந்தது. அப்போது மதுக்கடையைப் பொது மக்கள் சூறையாடினர். இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகத் தாய்மார்களும் பொது மக்களும் திரண்டு வீறு கொண்ட போராட்டத்தை நடத்துவதற்கு வித்து ஊன்றியவர் நினைவில் வாழும் அன்னை மாரியம்மாள் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடவில்லை.

கலிங்கப்பட்டி மதுக்கடையை மூட வேண்டும் என்று கலிங்கப்பட்டி ஊராட்சியில் ஆகஸ்டு 4, 2015-இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது, ஆனால், ஊராட்சித் தீர்மானத்தை ஏற்காமல் கலிங்கப்பட்டியில் மதுக்கடையைத் திறப்பதற்கு தமிழக அரசு உத்திரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. வை. இரவிச்சந்திரன் அவர்கள் தாக்கல் செய்த வழக்கில், உயர் நீதிமன்றம் 2016, நவம்பர் 16 அன்று வழங்கிய தீர்ப்பில், ‘கலிங்கப்பட்டி டாஸ்மாக் மதுக்கடை நிரந்தரமாக மூடப்பட வேண்டும்’ என்று உத்திரவிட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு ஜே.எஸ். கேகர் மற்றும் டி.ஒய். சந்திரசூட், சஞ்சய் கிஷன் கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2017 பிப்ரவரி 27-ஆம் தேதி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, கலிங்கப்பட்டி ஊராட்சி தீர்மானம் செல்லும் என்றும் தீர்ப்பு அளித்தது.

தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுமாறு கோரிக்கை வைத்து பொது மக்கள் குறிப்பாகப் பெண்கள் தன்னெழுச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களைக் காவல்துறை அடக்குமுறை மூலம் தடுத்து விடலாம் என்று தமிழக அரசு மனப்பால் குடிக்கின்றது. தமிழகத்தைச் சீரழிவில் இருந்து மீட்கப் போராடும் பொது மக்களை ஒருபோதும் ஒடுக்கி விடமுடியாது.

எனவே, அ.தி.மு.க. அரசு உடனடியாக மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 12

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் மாதம் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும், அதற்கான அறிவிக்கையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு செப்டம்பர் 4-ஆம் தேதி உத்திரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்திரவைச் செயற்படுத்தாமல் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் மனுத் தாக்கல் செய்து இருக்கின்றது.

உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிந்து ஓராண்டு காலம் ஆகப் போகும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு இழுத்தடிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது ஆகும்.

எனவே, சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டவாறு உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 13

செம்மொழி ஆய்வு மையங்கள் குறித்த நிதி ஆயோக்கின் பரிந்துரை தமிழ் அறிஞர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தி, சமஸ்கிருதம் தவிர மற்ற மொழிகளுக்கான ஆய்வு மையங்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களின் கீழ் ஒரு துறையாக மாற்றுவதற்கு நிதி ஆயோக் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

சென்னையில் இயங்கி வரும் செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு இருப்பதை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழக முதல்வர்தான் செம்மொழி நிறுவனத்தின் ஆட்சிக்குழுத் தலைவர் ஆவார். ஆனால், அவர் இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று கூறி இருக்கின்றார். திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் செம்மொழித் தமிழ் ஆய்வு மையத்தை இணைப்பதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவு அனுப்பி உள்ள நிலையில் தமிழக முதல்வர் இதுகுறித்து தகவல் இல்லை என்று தெரிவிப்பது சரியல்ல.

செம்மொழித் தமிழ் ஆய்வு மையத்தை திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 14

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த திட்டக்குழுவைக் கலைத்து விட்டு, நிதி ஆயோக் (National Institution for Transforming India) எனும் அரசுக்கு ஆலோசனைகளைக் கூறும் அமைப்பை பா.ஜ.க. அரசு 2015 ஜனவரி 1-இல் உருவாக்கியது. மாற்றத்தைக் கொண்டு வரும் எனக் கூறப்பட்ட இந்த அமைப்பு கூட்டு ஆட்சியை வலுப்படுத்தும் எனவும், இந்தியாவை மாற்றி அமைக்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி முழங்கினார். ஆனால், நிதி ஆயோக்கின் செயல்பாடுகள் மாநில உரிமைகளைப் பறிப்பதற்கும் கூட்டு ஆட்சிக் கோட்பாட்டிற்கு எதிரான பரிந்துரைகளை அளிப்பதற்கும் காரணமாக உள்ளன.

வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது, பொது விநியோகத் திட்டத்தை இரத்து செய்தல், அரசுப் பள்ளிகளைத் தனியார் மயம் ஆக்குதல், மருத்துவத் துறையை முற்றாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து தனியாரிடம் ஒப்படைத்தல் போன்ற பரிந்துரைகளை அளித்து இருக்கின்றது.

மாநில முதல்வர்களுடன் கலந்தாய்வு நடத்தி திட்டங்களை அறிவிப்போம் என்று நிதி ஆயோக் தலைவர் அர்விந்த் பனகாரியா அறிவித்தார். ஆனால், அவரே பதவியில் நீடிக்க முடியாமல் வெளியேறி விட்டார்.

எனவே, நடைமுறையில் நிதி ஆயோக்கின் செயல்பாடுகள் மாநிலங்களுக்கு எதிராக இருப்பதால் ‘நிதி ஆயோக்’ அமைப்பை மத்திய அரசு கலைக்க வேண்டும்; மாநிலங்களின் அதிகhர வரம்பில் தலையிடாமல், நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து மாநிலங்களுடன் கருத்து ஒற்றுமையுடன் செயல்படத் தகுந்த ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 15

மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய சுகாதாரக் கொள்கை 2017, 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2012-2017) குறிப்பிட்டவாறு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 விழுக்கhடு சுகhதாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்வதற்கான கhல அளவை 2020-ஆம் ஆண்டில் இருந்து 2025-ஆம் ஆண்டுக்கு மாற்றி இருக்கின்றது.

நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் ஜி டி பி -யில் 5 – 6 விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலையில் தற்போது வெறும் 1.4 விழுக்காடு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு சுகாதாரப் பாதுகhப்பிற்கு மத்திய அரசின் பொறுப்பைக் கைவிடும் வகையில் முழுமையான இலவச சுகாதாரச் சேவையைத் தனியாரிடம் ஒப்படைத்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை முன்வைக்கின்றது தேசிய சுகாதாரக் கொள்கை 2017. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அனைத்து சுகாதார நிலையங்களையும் தரம் உயர்த்துதல் எனும் பெயரால் தனியாரிடம் ஒப்படைக்கப் பரிந்துரை செய்துள்ளது.

ஏழை, எளிய மக்களின் மருத்துவ சேவையை உறுதிப்படுத்த சுகாதாரக் கட்டமைப்புகளை அரசு வலுப்படுத்துவதற்குப் பதிலாக, தனியாரிடம் ஒப்படைப்பது என்ற முடிவு பெரும் பாதிப்பையும், பொருளாதாரச் சுமையையும் மக்களுக்கு ஏற்படுத்தும்.

எனவே, தேசிய சுகhதாரக் கொள்கை 2017-யைத் திரும்பப் பெற வேண்டும்; பொது சுகாதாரத் துறை அரசுக் கட்டுப்பாட்டிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 16

மதுரை அருகே உள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் 2220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்றும், கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் மத்திய கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

காவிரிப்பூம்பட்டினம் அகழ்வு ஆராய்ச்சிக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை தமிழகத்தில் கீழடியில்தான் ஆய்வு நடத்தி இருக்கின்றது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மேடானது சுமார் 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது ஆகும். கி.பி. 300- ஆம் ஆண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் பல கிடைத்தன.

கீழடியில் இரண்டு விழுக்காடு மட்டுமே அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்தியதில் 5,300 ஆண்டுகள் தொன்மையான பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் சில ஆண்டுகள் ஆராய்ச்சிகள் தொடர்ந்தால்தான் கீழடியின் உண்மையான காலத்தையும் அங்கு வாழ்ந்த மக்களின் நாகரிகத்தையும் அறிவதுடன் சங்ககால நகரம் பற்றிய முழுமையான சான்று ஆதாரங்களும் கிடைக்கும்.

ஆனால், மத்திய தொல்லியல் துறை கீழடி அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்ட தொல்லியல் கண்காணிப்பாளரை மாற்றியது மட்டுமின்றி, பல வகைகளிலும் முட்டுக்கட்டை போட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

மத்திய கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வலியுறுத்தியவாறு கீழடி தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சி தொய்வின்றித் தொடர வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் : 17

தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நூறு நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக துண்டு அறிக்கைகள் வெளியிட்டுப் பரப்புரை செய்தார் என்று சேலம் கல்லூரி மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். அவரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து எடப்பாடி பழனிசாமி அரசு பாசிசப் போக்கை வெளிப்படுத்தியது.

சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தை ஏவியது செல்லாது; அதை இரத்து செய்ய வேண்டும் என்று அவரது தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 5-ஆம் தேதி குண்டர் சட்டத்தை இரத்து செய்து மாணவி வளர்மதியை விடுதலை செய்துள்ளது.

மே 21 அன்று சென்னை மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவு ஏந்தல் நிகழ்ச்சியை நடத்திய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய நால்வர் மீதும் தமிழக அரசு குண்டர் சட்டத்தை ஏவி கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைத்துள்ளது.

அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை பேச்சு உரிமை, எழுத்து உரிமை, கருத்து உரிமைகளைப் பறிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அரசு பாசிசப் போக்குடன் நடந்து கொள்வதும், அறவழி மக்கள் போராட்டங்களைக் காவல்துறையினரைக் கொண்டு ஒடுக்க நினைப்பதும் கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.

தமிழக அரசு உடனடியாக திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் மீதான குண்டர் சட்டத்தை இரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும்; நீட் நுழைவுத் தேர்வைக் கண்டித்து அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்று, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளோரை விடுதலை செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 18

இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், மீனவர்களைத் தாக்கி மீன்பிடிப் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்வதும் தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சிகள் ஆகி விட்டன.

தற்போது இலங்கை அரசு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கடற்தொழில் சட்டத்திருத்த முன்வடிவு, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்றும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றது. கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக அப்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை உறுதி செய்யப்பட்டதை மீறி இலங்கை அரசு இத்தகைய சட்டத்தை இயற்றி உள்ளது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், மீன்பிடித் தொழிலை விட்டே அவர்களை வெளியேற்றும் வகையில் மிரட்டல் விடும் நோக்கத்திலும் இலங்கை அரசு கொண்டு வந்துள்ள தமிழக மீனவர்களுக்கு எதிரான இச்சட்டத்தைத் திரும்பப் பெற இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும்.

இலங்கைச் சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்வதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைத் திரும்பப் பெறுவதுடன் அதற்குரிய நட்ட ஈட்டுத் தொகையையும் இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 19

லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் ஜூலை 26, 2017-இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவு இட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அட்வகேட் ஜெனரல் இலியனார் சார்ப்ஸ்டன் அம்மையார், விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ததற்கு சரியான ஆதாரங்கள் இல்லை என்று தெளிவுபடுத்தி இருக்கின்றார்.

லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்ச நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வாதாடியவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோபே, 2011 ஜூன் 1-ஆம் நாள் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த மாநாட்டில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பேசிய ஆங்கில உரையைப் பிரமாண வாக்குமூலமாக லக்சம்பர்க் ஐரோப்பிய ஒன்றிய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான தீர்ப்பைப் பெற்றுள்ளார் என்பது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பெருமை சேர்ப்பது ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பின்பற்றி உலகின் மற்ற நாடுகளும், இந்தியாவும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கென்று தாயகம் மலர பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றே தீர்வு என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 20

மியான்மர் நாட்டில் சிறுபான்மை இன ரோஹிங்கியா இஸ்லாமிய மக்கள் மீது பர்மிய பௌத்தர்களும், மியான்மர் அரசும் நடத்தி வரும் வன்முறைத் தாக்குதல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. மியான்மர் நாட்டில் இருந்து 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்க தேசத்துக்குள் அகதிகளாகச் சென்றுள்ளனர். இந்தியாவில் மேற்கு வங்காளத்திலும் ரோஹிங்கியா அகதிகள் குவிந்துள்ளனர். காஷ்மீர் உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மரண பூமியில் இருந்து உயிருக்கு அஞ்சி அடைக்கலம் தேடி வந்த ரோஹிங்கிய முஸ்லிம் மக்களை மனிதாபிமானத்துடன் ஏற்று உதவி அளிக்கின்ற கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு 40 ஆயிரம் ரோஹிங்கிய இன மக்களை மியான்மருக்கு நாடு கடத்தத் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி இருப்பது, மோடி அரசின் ஈவு இரக்கமன்றத் தன்மையை வெளிப்படுத்துகின்றது.
இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் சையத் ராட் அல் உசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு ரோஹிங்கிய முஸ்லிம்களை மியான்மருக்குத் திருப்பி அனுப்பும் முடிவைக் கைவிட்டு, மனித நேயத்துடன் அம்மக்களுக்கு அகதிகளுக்கான உதவிகளை அளிக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் : 21

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளை மூடக் கோரி இடிந்தகரையில் மக்கள் ஆண்டுக்கணக்கில் போராடி வருகின்றனர். உலகம் முழுவதும் அணு உலைகளால் ஏற்பட்டு வரும் கதிரியக்கப் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு காரணமாக அணு மின்சார உற்பத்திக்காக அமைக்கப்படும் அணு உலைகளுக்கு எதிர்ப்பு தோன்றி இருக்கின்றது.
அணு உலையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்து வெட்ட வெளிச்சம் ஆக்கி உள்ளது. கூடன்குளத்தில் ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகளும் முழு அளவில் மின் உற்பத்தியில் ஈடுபடவில்லை.

இந்நிலையில் அணு உலைகளை மூடக் கோரும் மக்களின் உணர்வுகளை அலட்சியம் செய்து விட்டு மேலும் மேலும் கூடன்குளத்தில் மூன்று, நான்கு மற்றும் ஐந்து, ஆறு என தொடர்ச்சியாக அணு உலைகளை அமைக்க ரஷ்ய நாட்டுடன் மோடி அரசு ஒப்பந்தம் போடுவதை வன்மையாகக் கண்டிப்பதுடன், கூடன்குளம் அணு உலைகளை மூட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 22 

தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டைக்குப் புதிய ரயில் தடம் அமைக்கின்ற பணிகள் நீண்ட நெடுங்காலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, விரைந்து பணிகளை முடித்து, போக்குவரத்துக்கு ஆவன செய்ய வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 23

தமிழ் உயர் ஆய்விற்காகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சித்துறை, உலகத் தமிழ்ச் சங்கம், செம்மொழித்  தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் எனப் பல நிறுவனங்களை நிறுவியும், தமிழில் முனைவர் பட்டம் பெற்று, இதர தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் தகுதி வாய்ந்தவர்களுக்குப் பணி வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே, இந்நிறுவனங்களில் இவர்களுக்குப் பணி வாய்ப்பு அளித்திட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

இவ்வாறு 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.