சென்னை:
முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி எச்சரித்துள்ளார்.

முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோர வேண்டும், இல்லை என்றால் 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி எச்சரித்துள்ளார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு துபாய் தொழில் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள அவர் முதலீட்டாளர்களை சந்தித்து வருகிறார். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சரின் துபாய் பயணத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆர்.எஸ் பாரதி, தமிழக வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியுள்ளார். தனது கருத்துக்கு அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆர்.எஸ் பாரதி எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சரை இழிவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் திமுக சார்பில் எடுக்கப்படும் சட்ட போராட்டத்தை அவரால் தாங்க முடியாது எனவும் எச்சரித்தார்.