சென்னை

திமுக அரசு தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார்.

அதில் அண்ணாமலை

”இந்த ஆண்டு காவிரி நதியில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி, 40 சதவீதம் குறைந்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது. இதற்கு முழுக்க முழுக்க திமுகவின் கையாலாகாத்தனமே காரணமாகும்.

திமுக அரசு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக, விவசாயிகள் பற்றியோ, காவிரி தண்ணீர் பற்றியோ, எந்தக் கவலையும் இன்றி, சரியான நேரத்தில் தண்ணீர் பெற்றுக் கொடுக்காமல், தமிழக விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது. 

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடனேயே, போதுமான அளவு தண்ணீர் இருந்தும், தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரைத் திறந்து விட மறுத்து வந்தது. திமுக அரசு அதை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. 

டெல்டா விவசாயிகள் 40 சதவீதம் குறைவான மகசூலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு, இந்த இரண்டு மாநில அரசுகளே முழு பொறுப்பு. விவசாயிகள்  பாதிப்புக்குள்ளாகியிருப்பதால் அதற்கான இழப்பீட்டை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”

என்று பதிந்துள்ளார்