அருள்மிகு அஞ்சேல் பெருமாள் திருக்கோயில்,  அகரம், திருநெல்வேலி மாவட்டம்.

அகரம் கிராமத்தில் மித்ரசகா என்ற நாடகக் கலைஞன் வாழ்ந்து வந்தான். இவன் தன் குழுவினருடன் நாடெங்கும் சென்று நல்ல கருத்துக்களை நாடகம் மூலம் பரப்பி வந்தான். ஒரு முறை காஷ்மீரில் தன் இஷ்ட தெய்வமான நாராயணனின் தசாவதாரக்கதையை நடத்தி காட்டினான். அதை காணவந்த காஷ்மீர் மன்னன் குங்குமாங்கனும், இளவரசி சந்திரமாலினியும் அகமகிழ்ந்தனர். சந்திரமாலினிக்கு மித்ரசகாவின் மீது காதல் உண்டானது.

பெற்றோரின் ஒப்புதலுடன் மணமுடித்து அகரம் கிராமத்திற்கு வந்தனர். அனைவரும் பாராட்டும் படி வாழந்த இத்தம்பதியினர் வயோதிக காலத்தில் ஒர் ஆசிரமம் அமைத்து இறைப்பணியில் ஈடுபட்டனர். நாராயணனின் சிறந்த பக்தர்களாக விளங்கினர். இவர்களது பக்திக்கு மெச்சிய நாராயணன், மாசி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் தசாவதாரக் காட்சி தந்து “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” எனும் அற்புத மந்திரத்தையும் உபதேசித்தார்.

இறைவனின் அவதாரம், பெருமை இவற்றை விளக்கி சொல்லும் நூல்களைப் புராணம் என்கிறோம். தாமிரபரணி மகாத்மிய புராணம் ஒரு முக்கிய நூல். அதில்தான் அகத்தியரால் ஏற்படுத்தப்பட்ட தாமிரபரணி நதி பற்றியும், அதன் கரையோரத்திலுள்ள புண்ணிய ஸ்தலங்களின் வரலாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அகரம் பெருமாள் கோயிலும் இதில் ஒன்று. இங்குதான் மகாவிஷ்ணு தன் பத்து அவதார காட்சிகளையும் தந்திருக்கிறார்.

பெருமாள் இங்கு தசாவதாரக் காட்சிதந்ததால் இத்தலம் தசாவதாரத்தலம் என்று அழைக்கப்படுகிறது. தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு முகமாக செல்வதால் தட்சிண கங்கை எனவும், சம்பு தீர்த்தம் எனவும் போற்றப்படுகிறது. எனவே இங்கு நீராடி வழிபட்டு எந்த பரிகாரம் செய்தாலும் அது காசியில் செய்த நற்பலனைத் தரும். இத்தல பெருமானை ஹயக்கிரீவர், அத்ரி மகரிழி, மாண்டவ்யர், கவுதமர், ஆங்கிரஸர், வசிஷ்டர், சோமர், துர்வாசர், கபிலர், முத்ராதேவிக்ஷ, அகத்தியர் போன்றோர் வழிபட்டுள்ளனர். 

மூலவர் அஞ்சேல் பெருமாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் காட்சிதருகிறார். மேலும் கணபதி, தர்மசாஸ்தா, கிருஷ்ணன் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் ஒரே சிலையில் மகாவிஷ்ணு தன் பத்து அவதார காட்சிகளுடன் அருள்பாலிக்கிறார். 

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி.

கோரிக்கைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.