நீட் தேர்வை நீக்க தொடர்ந்து பலவிதங்களில் போராடி வருவபவர் தி.மு.க. பிரமுகர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர்.  நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா, விரக்தியில் தூக்கிட்டு இறந்த நிலையில், சிவசங்கர், வருத்தத்துடன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“பெருந்துயரத்திற்கு பின்னான அமைதியில் இருக்கிறோம். அனிதாவின் இழப்பை அவ்வளவு எளிதாக யாரும் கடந்து விட முடியாது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் இழப்பின் வலியோடு தவிக்கிறார்கள்.

கனவுடனான கண்கள். மழலை மாறாத முகம். எண்ணி பேசும் சொற்கள். தலைமுறை வறுமையை பறை சாற்றும் உடல். இதை எல்லாம் தாண்டி அறிவு முத்திரை பதித்து தனி அடையாளம் கண்டாள்.

குழுமூர் கிராமத்திற்கு மருத்துவ சேவையாற்றும் தேவதையாக விரும்பினாள் அவள். சிறு வயதில் அன்னை ஆனந்தியை நோய்க்கு பறி கொடுத்த தாக்கம் குறையவே இல்லை.

இன்னொரு குழந்தைக்கு தாயில்லாமல் போய்விடக் கூடாது என்று, தன் தாயை இழந்த நேரத்தில் கொண்ட உறுதி தான் கல்வியில் அவளை வழி நடத்தியது. அது தான் அவளுக்கான உத்வேகம்.

ஏதோ பன்னிரண்டாம் வகுப்பில் மாத்திரம் எதேச்சையாக மதிப்பெண் எடுத்து விடவில்லை அவள். பத்தாம் வகுப்பிலும் முத்திரை பதித்தவள் தான் அவள். 478 மதிப்பெண்கள்.

நீட் தேர்வில் 86 மதிப்பெண் எடுத்தாள். மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த குழந்தைக்கு திடீரென மத்தியப் பாடத்திட்டத்தில் கேள்வி தாள் என்றால் என்ன செய்வாள் பாவம். படித்ததெல்லாம் கிராமப்புற சூழல்.

பன்னிரண்டாம் வகுப்பில் அவள் எடுத்த மதிப்பெண்கள் 1176. மருத்துவப் படிப்பிற்கான மதிப்பெண் 196.25. கடந்த ஆண்டு போல் மாநிலப் பாடத்திட்டத்தின் படி கலந்தாய்வு நடந்திருந்தால் இந்நேரம் அவள் மருத்துவ மாணவி.

அவளது சொந்த ஊரான குழுமூர் கிராமம் இருப்பது செந்துறை ஒன்றியத்தில். அவள் ஊரை சுற்றி பத்து கிராமங்களில் இது வரை ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து மருத்துவர் கிடையாது. அதற்கான வாய்ப்பு அனிதாவிற்கு கிடைத்தது.

இவள் தான் இந்தப் பகுதியின் முதல் பெண் மருத்துவராக வந்திருப்பாள். குழுமூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பணி புரிந்திருப்பாள். முதுநிலையும் படித்திருப்பாள். நிச்சயம் சாதித்திருப்பாள்.

அதை எல்லாம் நீட் தேர்வு மறுத்து விட்டது. அதனால் தான் நொறுங்கிப் போனாள். அதன் விளைவே போராட்டக் களத்திற்கு வந்தாள். நீட் தேர்வை எதிர்த்து நின்றாள்.

தன்னை போல் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களோடு இணைந்து கட்சித் தலைவர்களை சென்னையில் சந்தித்தாள். நீட் தேர்வில் விலக்கு கோரி கோரிக்கை வைத்தார்கள் மாணவர்கள்.

அப்போது தான் மாநில அமைச்சர்களும், முதலமைச்சரும், மத்திய அமைச்சர்களும் இந்தாண்டு நீட் தேர்விற்கு விலக்கு வழங்கப்படும் என மாறி, மாறி தொலைக்காட்சியில் அறிவித்தார்கள்.

அனிதாவிற்கும் மற்ற மாணவர்களுக்கும் நம்பிக்கை வந்தது. இவர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.

மத்தியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், நீட் தேர்வு அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற நேரத்தில் அதில் எதிர்மனுதாரராக சேர்ந்தார்.

காலை வரை தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதாக சொன்ன மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வழக்கு விசாரணையின்றி தள்ளுபடியானது.

நீதியை நிலை நாட்டும் உச்சபட்ச அமைப்பான உச்சநீதிமன்றமே கைவிரித்த பிறகு, நீட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து நிற்கதியாகிப் போனார்கள். அதில் அனிதாவும் ஒருத்தி.

ஆனால் பல நண்பர்களும் அனிதாவுக்கு உதவ முன்வந்தார்கள். அனிதா அடுத்த ஆண்டில் நீட்டில் அதிக மதிப்பெண் பெற வேண்டும், அதற்கான பயிற்சி பெற என்ன செலவானாலும் ஒப்புக் கொள்ள என் நண்பர்களும் துடித்தார்கள்.

அனிதா நீட்டில் அதிக மதிப்பெண் எடுத்து சாதிக்க வேண்டும் என்பது எல்லோரது எண்ணமும். அனிதாவின் அண்ணனிடமும் விருப்பம் தெரிவித்தேன். அவரது தந்தையை சந்திக்க திட்டமிட்டோம். ஆனால் அனிதா அவசரப்பட்டு விட்டாள்.

அனிதா யாரிடமும் அதிகம் பேச மாட்டாள். அப்பா திருச்சி மார்க்கெட்டில் கூலி வேலை, அதனால் அவர் வீட்டில் இல்லா நிலை. அண்ணன் மணிரத்தினத்திடம் பேசுவாள்.

அடுத்த வீட்டு அக்கா செல்வியிடம் பேசுவாள். “அம்மா ஏன் என்ன விட்டுட்டு போனாங்க?”, இது தான் அந்த அக்காவிடம் அனிதா அதிகம் கேட்ட கேள்வியாக இருக்கும். தன் மருத்துவர் கனவை அடிக்கடி சொல்லுவாள்.

அம்மாவின் பிரிவும், அதன் தாக்கமும் தான் அவளை கல்வியை நோக்கி அவ்வளவு வலுவாக நகர்த்தியது. கல்வியில் சாதிப்பதன் மூலம் மருத்துவராவது கனவு.

கலைந்தது கனவு மாத்திரமல்ல, அந்த குடும்பத்தின் கொழுந்தே காணாமல் போனது.

பல குடும்பங்கள் தம் மகளை இழந்ததாகவே நினைக்கின்றன. அந்த முகம் நினைவை விட்டு அகலாது.

# அந்தக் கண்கள் இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன”

–    இவ்வாறு சிவசங்கர் பதிவிட்டுள்ளார்.