சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக சார்பில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்தது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

வாழப்பாடியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அன்புமணி ராமதாஸ் மேடையேறிய நிலையில் அவர் பேசுவதற்காக மேடையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த மைக்கை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனால் தொண்டர்கள் திரளாக மேடையேறியதை அடுத்து மேடை ஆட்டம் கண்டது.

மேடை ஆட்டம் காண்பதை உணர்ந்த அன்புமணி ராமதாஸ் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தாவி குதித்தார்.

அவர் கீழே குதிக்கவும் மேடை சரியவும் மேடை மீதிருந்த தொண்டர்கள் சரிந்து விழுந்தனர்.

இந்த அசம்பாவித நிகழ்வில் அன்புமணி உட்பட கட்சியினர் யாரும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

மேடை சரிந்ததை அடுத்து மேஜை போடப்பட்டு அதன் மீது ஏறி நின்று பேசி பொதுக்கூட்டத்தை நிறைவு செய்தார் அன்புமணி ராமதாஸ்.