சென்னை:

சென்னையில்  பெண்கள், மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக பிங்க் கலரிலான அம்மா ரோந்து வாகனம் முதல்வர் எடப்பாடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதுபோல, காவலர்கள் உடலில் அணிந்துகொள்ளும் வகையில் காமிராவும் போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்பட்டது.

சுமார் ரூ.7½ கோடியில் மதிப்பீட்டில் 40 அம்மா ரோந்து வாகனங்களின் பயன்பாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  நேற்று (26–ந் தேதி) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.

மேலும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக 98 லட்சம் ரூபாய் செலவில் 201 உடல் இணை நிழற்படக் கருவிகளை வழங்கிடும் அடையாளமாக 7 போக்கு வரத்து காவலர்களுக்கு உடல் இணை நிழற்படக் கருவிகளை வழங்கினார்.

‘‘பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு’’ திட்டத்திற்காக மத்திய அரசு தலைநகர் டில்லி,  சென்னை, மும்பை, கல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 8 நகரங்களை தேர்வு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் 425 கோடி ரூபாய் சென்னை பெருநகரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்மூலம், சென்னை பெருநகரத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து மகளிர் காவல் நிலைய ரோந்து பயன்பாட்டிற்காக இந்த அம்மா ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இளஞ்சிவப்பு நிறம் கொண்ட அம்மா ரோந்து வாகனங்கள் மூலம், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கவும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும், சென்னை நகரத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், வழிபாட்டு தலங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடற்கரை ஆகிய இடங்களில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு தனிக்கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காவலர்களுக்கு உடல் இணை நிழற்படக் கருவிகள்

மேலும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினருக்கு, போக்குவரத்து விதிமீறல்கள் புரிபவர்கள் மீது வழக்குகள் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 98 லட்சம் ரூபாய் செலவில் 201 உடல் இணை நிழற்படக் கருவிகள் (Body Worn Cameras) வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 போக்குவரத்து காவலர்களுக்கு உடல் இணை நிழற்படக் கருவிகளை வழங்கினார்.

இந்த உடல் இணை நிழற்படக் கருவிகளில் உள்ள 2 எம்.பி. கேமராக்கள் மூலமாக ஒலி மற்றும் ஒளி பதிவுகள் (ஆடியோ மற்றும் வீடியோ ரிக்கார்டிங்), புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம். இப்பதிவுகளில் நிகழ்நேர தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை தானாகவே பதிவாகும்.

மேலும், இக்கேமராக்களில் பொருத்தப்பட்டிருக்கும் 4ஜி இணைப்பு மூலமாக கேமராக்களின் நிழற்பட பதிவுகளை, காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் நேரலையில் கண்காணிக்கலாம். அத்துடன், போக்குவரத்து அதிகாரிகள் எங்கு வழக்கு பதிவு செய்கிறார்கள் என்பதையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாக வரைபடத்தில் நேரலையில் கண்காணிக்கலாம். இதன்மூலம், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் போக்குவரத்து விதிமீறல்களுக்கு வழக்குகள் பதிவு செய்வதில் வெளிப்படை தன்மையும், நம்பகத் தன்மையும் உறுதி செய்யப்படும்.