சென்னை: நாங்கள் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் இன்று அம்மா உணவகம் இருக்காது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெய்ய கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் ஜெயலலிதா பெயர்களை அழிக்கிறது என்று குற்றம் சாட்டினார். அதுபோல முன்னாள் அதிமுக அமைச்சர் அன்பழகனும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் நாங்கள் காழ்ப்புணர்ச்சி யுடன் நடந்துகொள்ளவில்லை என்றும்,  அவ்வாறு காழ்ப்புணர்ச்சியோடு நாங்கள் நடந்து கொண்டிருந்தால் அம்மா உணவகம் தற்போது செயல்பட்டு இருக்காது என்று கூறியதுடன்,  காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் எந்த எண்ணமும் கழக அரசுக்குக் கிடையாது. காழ்ப்புணர்ச்சியோடு செயல்படவில்லை என்று துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “ஜெயலலிதா பெயரை வைக்கவேண்டும் என்பதற்காகவே பல்கலைக்கழகம் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிதியோ இடமோ ஒதுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.