சென்னை:

மித்ஷாவின் இந்தி மொழி குறித்த சர்ச்சைக்குரிய டிவிட் பதிவுக்கு, அதிமுக தரப்பிலும் நாசூக்காக விமர்சிக்கப்பட்டுஉள்ளது. “நாட்டின் ஒரே மொழியாக இந்தி” அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து தெரிவித்து உள்ளார்.

இன்று வட மாநிலங்களில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுவதையொட்டி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்பதிவில்,  நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவின் கருத்துக்கு தமிழகஅரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி வரும் அதிமுகவும் நாசூக்காக சாடியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைசெல்வன்,  இந்தி மொழி குறித்த  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது எண்ணத்தை  பதிவு செய்திருக்க லாம். ஆனால் ஒரு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் கலாச்சாரத் தில், இதற்கு சாத்தியக்கூறு உண்டு என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நாடாளுமன்றத்தில் அண்ணா உரையாற்றும் போது, முன்னாள் பிரதமர் நேருவும் அவையில் அமர்ந்திருந்தார். அப்போது பேசிய அண்ணா,  அதிகமான மக்கள் பேசுகிறார்கள் என்பதால் இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமா..?

அப்படிப் பார்த்தால் இந்தியாவில் மயில்களை விட காக்கைகளின் எண்ணிக்கைதான் அதிகம். ஆனால் நாம் தேசிய பறவையாக மயிலை தான் கொண்டிருக்கிறோம் தவிர காக்கைகளை அல்ல என்ற வாதத்தை முன்வைத்து அனைவரின் ஆதரவையும் அண்ணா அப்போது பெற்றார்.

தமிழ் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட மொழி என்பதை தற்போதைய பிரதமர் மோடி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் மொழியின் மீது அன்பும், பாசமும் கொண்டிருப்பதாக அவர் பல்வேறு தருணங்களில் எடுத்துரைக்கிறார். எனவே தமிழ் மொழிக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.