ராமநாதபுரம்: இந்தி திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அமீர்கான் எப்போதும் போதைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதன் விளைவுகள் என்னென்ன என்பது குறித்தும் ராமநாதபுரத்தில் இளைஞர்களிடம் பேசினார்.

நடிகர் அமீர்கான் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இளைஞர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் சந்தித்து உடல்நலத்தைப் பேணி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென விழிப்புணர்வுக்கான ஒரு சந்திப்பில் கூறினார்.

அவ்வாறு ஆரோக்கியமாக வாழவேண்டுமானால் போதைப் பழக்கம் எதுவும் தங்கள் வாழ்வில் அண்ட விடாது பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம் என்று வேண்டுகோள் வைத்தார்.

லால்சிங் சத்தா என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் தனுஷ்கோடி வந்திருந்த போது ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் இளைஞர்களிடமும் சுற்றுலாப் பயணிகளுடனும் போதைப் பழக்கம் குறித்த விழிப்புணர்வுக்காக பேசுமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் இவ்வாறு பேசினார்.

அவர், ராமநாதபுரம் மாவட்டம் தனிச்சிறப்பு வாய்ந்த மாவட்டம் என்றும். இங்குள்ள இளைஞர்கள் தங்களது உடல்நலனைப் பேணி ஆரோக்கியமாக வாழவேண்டுமென்றும், அவ்வாறான வாழ்க்கைக்கு போதைப் பழக்கங்கள் இல்லாத வாழ்க்கை அவசியம் என்றார்.

வாழ்க்கை என்பது ஒரு முறை வழங்கப்படும் வாய்ப்பு அதை முழுமையாக வாழ போதைப் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.