நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்படும் ராமமோகனராவ், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் காப்பாற்றப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு அலுவலகங்களில் வருமானவரி ரெய்டு நடந்தது. கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம், தங்கக் கட்டிகள், கைப்பற்றப்பட்டன. பல ஆவணங்களும் கிடைத்தன.
இதையடுத்து அவரை வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். நேற்றே (வெள்ளிக்கிழமை)  அவர் விசாரணைக்கு ஆஜராகவேண்டும்.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. ஆகவே  விசாரணையை இன்று  ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில்தான் இன்று விடியற்காலை, அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். . அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வருமான வரித்துறையினரால் கைது செய்யப்படலாம் என்று எழுந்த தகவல்களை அடுத்து, நெஞ்சுவலி என்று சொல்லி மருத்துவமனையில் ராவ் சேர்ந்ததாக முதலில் தகவல் வெளியானது.
இந்த நிலையில், அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், காப்பாற்றப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
“முறைகேடான வழியில் பலப்பல கோடி ரூபாயை குவித்து வைத்திருக்கிறார் ராமமனோகர்ராவ். அவருக்கு நெருக்கமான “மேலிடத்தினர்” பற்றி, வருமானவரி  அதிகாரிகள் தோண்டித்துருவி விசாரிப்பார்களோ என்ற பயத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். நல்லவேளையாக காப்பாற்றப்பட்டார்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் ராவ் குடும்பத்தினர்  நெஞ்சுவலி காரணமாகவே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லி வருகிறார்கள்.
அதே நேரம், “நெஞ்சுவலி – தற்கொலை முயற்சி.. இரண்டுமே நாடகம்” என்றும் ஒரு கருத்து உலவுகிறது.