சென்னை; பெத்தேல்நகர் ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில்  அரசின் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை  ஏராளமானோர் ஆக்கிரமித்து வசித்து வருகின்றனர். இந்த  ஆக்கிர மிப்புகளை அகற்றும்படி கடந்த 2015, 2017ம் ஆண்டுகளில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாநிலஅரசும், அதிகாரிகளும் நீதிமன்றம்  பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை. இதையடுத்து தமிழகஅரசு மீது ஹெச்.சேகர் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி  நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போத,  பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருப்பவர்களுக்கு 38 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மூலமாக மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில்,  926 பேருக்கு வீடுகள் தயாராக இருப்பதாகவும், 510 பேருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேலும், அந்த பகுதியில் செயல்பட்டு வந்த  வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும், அவை மீண்டும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆகிரமிக்கப்பட்ட குடியிருப்பு கட்டடங்களை பொறுத்தவரை, தமிழக அரசால் அவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, அதில் வீடுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ஆர்.மணிசங்கர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மொத்தமுள்ள 1436 ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடங்களை ஒதுக்குவதற்காக தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் 29கோடி ரூபாய் ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 1436 ஆக்கிரமிப்பாளர்களில் 926 பேருக்கு வீடுகளை ஒதுக்க வாரியம் தயாராக இருப்பதாகவும், மீதமுள்ள 510 பேருக்கு இந்த ஆண்டு டிசம்பருக்குள் ஒதுக்கப்படும் என வாரியம் தெரிவித்துள்ளதவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அந்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், அதுகுறித்து மனுதாரர் தரப்பில் விளக்கமனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.