சென்னை: தமிழகத்தில் இப்போது மின்தேவை 2 ஆயிரம் மெகாவாட் அதிகரித்துள்ளது, இதன்மூலம் மொத்த மின்தேவை 16,500 மெவாட்டாக அதிகரித்துள்ளது என்று அமைச்சர்  செந்தில்பாலாஜி கூறினார்.

தமிழ்நாட்டின் மின் திட்டம் நிலை-3 தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்டார்.பின்னர்  அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினர். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர், வட சென்னை அனல் மின் நிலைய நிலை– 3 கலைஞரால் 2010–ம் ஆண்டு 800 மெகாவாட் அளவிற்கு அனல் மின் நிலையத்தின் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2019–ம் ஆண்டு இத்திட்டப் பணிகள் முடிந்து உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும்,

ஆனால், இத்திட்டம் குறிப்பிட்ட காலத்தில் நிறைவு பெறவில்லை. இந்த பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் மிக விரைவாக  முடித்து உற்பத்தி தொடங்க வேண்டும் என்று வாரியத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி, பணிகள் விரைவுபடுத்தப்பட்டு ரூ.8,723 கோடி மதிப்பிலான திட்டம் 83 விழுக்காடு பணிகள் இன்றுவரை நிறைவு செய்யப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் பணிகள் 6 மாத காலத்தில் முழுவதுமாக நிறைவு செய்து டிசம்பர் மாத இறுதிக்குள் வணிகரீதியாகத் தொடங்க பணிகள் நடைபெற்றுவருகின்றன என்றார்.

மேலும்,  தமிழகத்தின் மின் தேவை என்பது 14,500 மெகாவாட் என்ற நிலை மாறி  தற்போது, 16,500 மெகாவாட் அளவிற்கு தேவை அதிகரித்து உள்ளது. அதற்கேற்ப நாம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், அது தொடர்பாக விநியோகத்திற்கான கட்டமைப்பையும் அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் அளவிற்கு கூடுதலாக மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி நிறுவு திறன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஒரு நாளைக்கு 8,800 டன் நிலக்கரி தேவை என்ற நிலை இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யக்கூடிய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த உற்பத்தி நிலையம் தற்கால தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு நிலக்கரியில் அதிக அளவு மின்சார உற்பத்தி செய்யக்கூடியது. பாய்லர் பணி மற்றும் ஒரு சில பணிகள் தான் நிலுவையில் உள்ளது. இது 6 மாதக் காலத்திற்குள் முடிவடைந்துவிடும். முதலமைச்சர் இத்திட்டத்தினை டிசம்பர் மாதம் தொடங்கிவைப்பார். முதலமைச்சர் நிலக்கரி தட்டுப்பாடு வருவதற்கு முன்பாகவே எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டெண்டர் சர்வதேச அளவில் கோரப்பட்டு இறக்குமதிக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

வேறு மாநிலங்கள் அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்கின்றபோது தமிழ்நாட்டில் மட்டும் குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் தற்போது நிலக்கரி இருப்பு உள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லாத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல், மே மாதத்திற்காக குறுகிய காலத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் (திட்டம்) ஆர்.எத்திராஜ், இயக்குனர் (உற்பத்தி) உ.ப. எழினி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.