கீழடி

கீழடியில் நடந்த அகழாய்வில் கிடைத்த அனைத்துப் பொருட்களையும் காட்சிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக தொல்லியல் துறை கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய நான்கு இடங்களில் தொடர்ந்து அகழாய்வு செய்து வருகிறது.  தற்போது ஏழாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.  தற்போது கீழடியில் ஏழு குழிகளும், அகரத்தில் எட்டு குழிகளும் கொந்தாகையில் நான்கு குழிகளும், மணலூரில் மூன்று குழிகளும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த அகழாய்வில் இதுவரை உறைக்கிணறுகள், வெள்ளி நாணயம், பவளம், உழவுக் கருவிகள், பானைகள், பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.  தற்போது தமிழக அரசு கொரோனா ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததைத் தொடர்ந்து பார்வையாளர்கள் தனிமனித இடைவெளியுடன் வந்து அகழாய்வு தளங்களைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்த அகழாய்வு தளங்களில் உள்ள பானைகள், பானை ஓடுகள், உறைக் கிணறுகள் உள்ளிட்டவற்றை மட்டுமே மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. ஆகவே வெள்ளி நாணயம் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் காட்சிப்படுத்தி தங்களைப்  பார்வையிட அனுமதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.