சென்னை: கோயம்பேடு சந்தையில்  விரைவில் அனைத்துக்கடைகளும் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என அதிகாரிகள்  தெரிவித்து உள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தையும் மூடப்பட்டது. இதனால், வணிகர்கள், கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கடந்த செப்டம்பர் 18ந்தேதி முதல் கட்டமாக பலசரக்கு மொத்த விலைக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டதுடன்,  செப்டம்பர் 28ந்தேதி முதல், காய்கறி மொத்த வியாபாரிகள் 200 பேருக்கு மட்டுமேஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் கடையை திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால், சிறு மொத்த விற்பனையில் ஈடுபடும் 1,700 காய்கறிவியாபாரிகள், 800 பழ வியாபாரிகள் தொழில் செய்ய முடியாமல் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து,  ‘கோயம்பேடு சந்தையை முழுமையாக திறந்து, அனைத்து வியாபாரிகளும் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால், அனைவருக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோயம்பேடு சந்தை சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் தலைமையில் கோயம்பேடு பழச்சந்தை வளாகத்தில் வியாபாரிகள்  காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் கோயம்பேடு சந்தை முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் நேற்று அதிகாலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, உண்ணாவிரதத்தை வியாபாரிகள் கைவிட்டனர்.

இதுகுறித்து சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ”கோயம்பேடு சந்தை திறக்கும் தேதி 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று சந்தை நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில், அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்புஅளிக்கும் வகையில் போராட்டத்தை கைவிட்டோம். 2 நாட்களில்தேதி அறிவிக்காவிட்டால், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குவோம்” என்றார்.