சென்னை: நீட் தேர்வு தொடர்பாக 8ந்தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடரின் 2வது கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்று கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 11 இராணுவ வீரர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் துரைமாணிக்கம், புனீத் ராஜ்குமார் ஆகியோர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது. இது நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதையடுத்து, பேரவை 110விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, கல்வி என்பது அடிப்படை உரிமை. நுழைவுத்தேர்வுகள் விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தை பாதிக்கும். 12ம்வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி சேர்க்கை அமையவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எந்தவொரு நுழைவுத்தேர்வு என்றாலும், அது ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும். ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதிதான் நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

மருத்துவத்துறையில் தமிழகம் நாட்டிற்கே முன்னோடியாக உள்ளது. மாநில அரசிடமிருந்து உரிமையை பறித்துள்ளது மத்திய அரசு. பள்ளிக்கல்வி முறையை அர்த்தமற்றதாக்கிவிட்டது நீட் தேர்வு, இதனை வேடிக்கை பார்க்க முடியாது. மாநில நிதியில் கட்டப்படும் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான உரிமையை நீட் தேர்வு பறித்துவிட்டது. நீட் விலக்கு மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவில்லை. தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்து வருகிறார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் நேரம் கொடுக்கவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக எம்.பி.க்களை சந்திக்க மறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. தமிழக எம்பிக்களை சந்திக்க மறுத்த அமித்ஷாவின் செயல் ஜனநாயக விரோத செயல். அத்தகைய அணுகுமுறைக்கு ஒரு அரசாங்கம் வாய்மூடி பார்வையாளனாக இருக்க முடியாது.

இது மக்களாட்சி மாண்புக்கு எதிரானது. மாணவர்களின் கனவினை #NEET சிதைக்கிறது; சட்டமுன்வடிவில் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார்; முறையிடச் சென்றால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவே மறுக்கிறார்.  அடுத்த கட்ட நடவடிக்கைகளை விவாதிக்க நாளை மறுநாள் அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டப்படுகிறது. நீட் விலக்கே நம் இலக்கு நீட் தேர்வுக்கு எதிரான சமூக நீதிக்கான போராட்டம் தொடரும். போராட்டங்கள் மூலமே வளர்ச்சி பெற்றுள்ளோம். நீட் தேர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும். அதில், எதிர்கால உத்திகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.