சென்னை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 22ந்தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

வரும 23ந்தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஒருநாள் முன்னதாக 22ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காவிரி நதிநீர் மேல்முறையீட்டு வழக்கில், தமிழகத்திற்கான தண்ணீர் தேவையை குறைத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துவரும் நிலையில், இன்று  சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில்  ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்கவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை செய்யும் விதத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 16ந்தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில்  காவிரி நதியை உரிமை கோர எந்த மாநிலத்துக்கும் உரிமை இல்லை என்றும், காவிரி நீரை எந்த மாநிலமும் தனியாக உரிமை கோர முடியாது, நதி நீர் என்பது தேசிய சொத்து என்று தெரிவித்த  உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி தண்ணீரை  177.25 டி.எம்.சியாக குறைத்துவிட்டது.

இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 23 ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், 22ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், முதன்முதலாக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கூட்டத்துக்கு கமல், ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.