மதுரை: பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்காவிட்டால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில், பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள், பெண்கள் உள்பட பல தரப்பினரும் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அதனால், டாஸ்மாக்கை மூட வேண்டும் என அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்துள்ளது. ஆனால், மாநில அரசுக்கு வருமானத்தை அள்ளி தருவதில் டாஸ்மாக் விற்பனையே அதிக அளவில் உள்ளதால், அதை மூட தமிழகஅரசு மறுத்து வருகிறது.

இந்த நிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் கொண்ட மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,  “தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன. இரவில் மது போதையில் வாகனத்தில் செல்வோரால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்தும், மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்கவும், விலைப்பட்டியல் வைக்கவும், கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விபரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்கவும், மதுபான பாட்டில்களில் அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் விபரங்களை தமிழில் குறிப்பிடவும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்‌‌.” என  கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழங்கிய புகைப்படங்களை பார்த்த நீதிபதிகள், இது போன்ற வழக்கைத் தொடர்ந்த மனுதாரரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது என்றனர். மேலும்,  சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது? என தெரியவில்லை என வேதனை தெரிவித்த நீதிபதிகள், இதற்கான உரிய தீர்வு காணப்பட வேண்டும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என குறிப்பிட்ட நீதிபதிகள், மேலும்,   மனுதாரர் தொடர்ச்சியாக இந்த வழக்கு தொடர்பான விபரங்களைத் திரட்டவும், அரசுத்தரப்பில் இது தொடர்பாக விளக்கம் பெற்று தரவும்  கூறிய நீதிபதிகள் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.