லக்னோ

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 மக்களவை தொகுதிகள் ஒதுக்க உள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த தேர்தலில் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகின்றது.

தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது இந்த நடைப்பயணம் உத்தரப்பிரதேசத்தில் நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கும் கூட்டணிக் கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் முரண்பாடு ஏற்படாததால் கட்சியின் தொகுதிப் பங்கீடு முடிந்த பிறகே யாத்திரையில் பங்கேற்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.

தற்போது கடைசி வாய்ப்பாக காங்கிரஸ் கட்சிக்கு 17 மக்களவை தொகுதிகளை வழங்க அகிலேஷ் முன்வந்துள்ளார்.  மேலும் காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சிகளுக்கான கூட்டணி சுமுகமாக முடிந்ததாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சமாஜ்வாதி கட்சி 62 இடங்களில் போட்டியிடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் தொகுதிப் பங்கீட்டால் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.