டில்லி

போராட்டத்துக்குத் தயாராகும் விவசாயிகளை மத்திய அரசு 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

பஞ்சாப் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட பூர்வ உத்தரவாதம் அளித்தல், பயிர்க்கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி நோக்கி பேரணியை முன்னெடுத்தனர். அவர்கள் பஞ்சாப்-அரியானா எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வேளாண் வாகனங்களுடன் அங்கு முகாமிட்டுள்ளனர்.

கடந்த 18 ஆம் தேதி அன்று விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய விளைபொருட்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்வதாக மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது.

ஆனால் விவசாயிகள் நலன் சாரா இந்த முன்மொழிவுகளை நிராகரிப்பதாக விவசாயிகள் 19 ஆம் தேதி தெரிவித்தனர்.இவ்வாறு நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் இது குறித்து,

“நாங்கள் விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் குறித்து விவாதிக்க  தயாராக இருக்கிறோம். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம்தான் தீர்வு காண முடியுமே தவிர போராட்டம் தீர்வு ஆகாது.எனவே விவசாயிகள் அமைதி காக்க வேண்டும்” 

என்று தெரிவித்துள்ளார்.