சென்னை: ஏகே ராஜன் குழுவால் தமிழக மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு குறித்து குழப்பம் ஏற்பட்டு உள்ளது என்று பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும்,  நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிவதற்காக  நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது. ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு,  ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.  இந்த குழுவுக்கு  86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளதாக நீதிபதி ஏ.கே. ராஜன் தகவல் தெரிவித்து உள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக பா.ஜ. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில், நீதிபதி ஏகே.ராஜன் குழு அமைத்த தமிழக அரசின்  அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியுள்ளது. மேலும்,  நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்த சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனை குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை களை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவு காரணமாக, மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும், ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க ஏதுவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.