நடிகர் அஜித்குமார் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக வந்தார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ள அஜித்குமார் அதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதற்காக வந்திருந்தார்.

அவருக்கு காதின் கீழ் பகுதியில் உள்ள நரம்பு பலவீனமாக இருப்பதை அடுத்து அதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனை அடுத்து அவர் மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டதை அடுத்து அஜித் உடல்நிலை குறித்து நேற்றிரவு வதந்தி பரவியது.

இதனால் மருத்துவமனை முன் அஜித் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வெளியில் வந்து தான் நலமாக இருப்பதாக நடிகர் அஜித் கூறியதை அடுத்து ரசிகர்கள் கலைந்து சேன்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அவருக்கு காதில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருக்கும் செய்தியில், 30 நிமிடம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பின் நடிகர் அஜித் பொது வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் இன்று இரவு அல்லது நாளை காலை வீடுதிரும்புவார் என்று கூறினார்.