தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.

இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் வேலையின்றி கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்காக ஃபெப்சி அமைப்புக்கும் ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுவரை திரைத்துறையில் ஆண் திரை பிரபலங்கள் மட்டுமே நன்கொடை அளித்துள்ள நிலையில், முதல் நடிகையாக நிதி அகர்வால் நன்கொடை அளித்தார். இதையடுத்து தற்போது இரண்டாவது நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியளித்துள்ளார்.