டில்லி

வானிலை பாதிப்பால் டில்லியில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தலைநகர் டில்லியில் கோடையை முன்னிட்டு தினமும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடுமையான வெப்பத்தினால் பொதுமக்களின் அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், டெல்லியில் இன்று அதிகாலை விஜய் சவுக் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசாகச் சாரல் மழை பெய்தது.

மழையால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. நகரின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசியது. மழைநீர் சாலைகளில் ஓடிய நிலையில், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சற்று மெதுவாகச் சென்றன.  டில்லியில் பெய்த மழை மற்றும் பலத்த காற்று வீச்சு ஆகியவற்றால் ஏற்பட்ட வானிலை பாதிப்புகளால் டெல்லி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது,  எனவே பயணிகள் அனைவரும், அவர்கள் பயணம் செய்யக் கூடிய  விமான நிறுவனங்களைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு, விமானங்களின் வருகை பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளும்படி டில்லி விமான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.